கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து 795 கன அடியாக சரிவு
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து நேற்று, 795 கன அடியாக சரிந்தது. நீர்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால், கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணைக்கு வரும் நீர்வரத்து படிப்படியாக சரிந்து வருகிறது. அதன்படி, கிருஷ்ணகிரி அணைக்கு நேற்று முன்தினம் வினாடிக்கு, 885 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை, 795 கன அடியாக சரிந்தது. அணையின் மொத்த உயரமான, 52 அடியில் நீர்மட்டம், 49.80 அடியாக உள்ளது. அணையில் இருந்து பாசனக்கால்வாய் மற்றும் ஆற்றில் வினாடிக்கு, 735 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.பாரூர் ஏரியின் முழு கொள்ளளவான, 15.60 அடிக்கு தண்ணீர் நிரம்பி உள்ளதால், ஏரிக்கு வந்து கொண்டிருக்கும், 18 கன அடி தண்ணீர், கால்வாய்கள் வழியாக திறந்து விடப்பட்டுள்ளது. ஊத்தங்கரை அருகே, பாம்பாறு அணைக்கு நீர்வரத்து, 200 கன அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவான, 19.60 அடியில் நீர்மட்டம், 17.60 அடியாக உள்ளது. இதனால் நீர்வரத்து முழுவதும் மதகு வழியாக ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. அதேபோல், சூளகிரி சின்னாறு அணையின் மொத்த கொள்ளளவான 32.80 அடிக்கு தண்ணீர் நிரம்பி உள்ளது. இதனால், அணைக்கு வரும், 6 கன அடி தண்ணீர், திறந்து விடப்பட்டுள்ளது. மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக, வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது.