| ADDED : ஆக 13, 2024 05:59 AM
மதுரை : ''இருவர் செய்ய வேண்டிய வேலையை ஒருவரே பார்ப்பதால், கவன சிதறல் ஏற்பட்டு விபத்து நேரிடுகிறது'' என மதுரை கோட்ட ரயில் நிலைய அதிகாரிகள் சங்கத் துணைத் தலைவர் விஜயராஜன் பேசினார்.இந்த அமைப்பின் சார்பில், மதுரை ரயில்வே ஸ்டேஷன் மேற்கு நுழைவாயிலில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஸ்டேஷன் மாஸ்டர்களின் வேலைப் பளுவை குறைப்பது, பணி நேரத்தை குறைப்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்க தலைவர் பிரபு டேவிட் தலைமை வகித்தார். கோட்டச் செயலாளர் ஜெகதீசன் முன்னிலை வகித்தார். துணைத் தலைவர் விஜயராஜன், மூத்த நிர்வாகிகள் செந்தில் கண்ணன், கல்யாணராமன் பேசினர்.விஜயராஜன் பேசியதாவது: கொரோனா காலத்திற்கு பிறகு தேஜஸ், வந்தே பாரத் உட்பட 7 புதிய அதிவிரைவு ரயில்களை அறிமுகப்படுத்தியதால் வேலைப்பளு அதிகமாகிவிட்டது. வேலைப்பளுவை குறைக்க எந்த நடவடிக்கையும் இல்லை. தொழில்நுட்ப கோளாறு நடந்தால், அதனை கவனிக்கும் போது சிக்னல் போன்ற மற்ற வேலைகளில் கவனம் செலுத்த முடியவில்லை. இருவர் பணிகளை ஒருவரின் தலையில் சுமத்துவதால் கவனம் சிதைந்து விபத்துகள் நேரிடுகிறது.ஒவ்வொரு வாரமும் ஒரு ஸ்டேஷன் மாஸ்டர் சஸ்பெண்ட் செய்யப்படுகிறார். இப்படி கடந்த ஓராண்டில் மட்டும் மதுரை - - திண்டுக்கல் தடத்தில் பணியாற்றிய 12 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.13 ஸ்டேஷன்களில் கூடுதல் ஆட்களை நியமிக்க உத்தரவு வந்த பின்பும் இன்று வரை நியமிக்கவில்லை. எனவே தினமும் 12 மணி நேரம் என்பதை 8 மணி நேரமாக குறைக்க வேண்டும். இதை நிறைவேற்றாவிட்டால் ஒவ்வொரு கிளையிலும் போராட்டம் நடக்கும் என்றார். காரைக்குடி கிளைச்செயலாளர் பிரவீன்குமார் நன்றி கூறினார்.