| ADDED : ஜூன் 18, 2024 07:04 AM
திருப்பரங்குன்றம் : மதுரை வடபழஞ்சி கிராமத்திற்குச் செல்லும் வழியில் 200 ஆண்டுகளுக்கும் முந்தைய பழமையான கல் மண்டபம் சிதிலமடைந்து காணப்படுகிறது.இது குறித்து மதுரை காமராஜ் பல்கலை ஆய்வு மாணவர் வினோத் கூறியதாவது:வடபழஞ்சியில் பல்வேறு வித தொல் எச்சங்கள் காணப்படுகின்றன. அவற்றில் ஒன்றான சிதைந்து போன இக்கல் மண்டபம் பராமரிப்பின்றி இருந்துள்ளது. சாலை விரிவாக்கத்தில் இடர்பாடுகளைச் சந்தித்து தரைமட்டமாகி விட்டது.இம்மண்டபம் இருந்த பகுதியில் கல் துாண்கள், மேற்கூரைகள் சிதறிக் கிடக்கின்றன. ஒரு துாணில் சங்கு, சக்கரம், நடுவில் வைணவக் குறியீடு பொறிக்கப்பட்டுள்ளது. எனவே இது வைணவ தொடர்புடைய மண்டபமாக இருக்கலாம் எனத் தெரிகிறது. இது இடையர் தர்மம் என உள்ளூர் மக்களால் அழைக்கப்படுகிறது.இது பயன்பாட்டில் இருந்தபோது வழிப்போக்கர் தங்குமிடமாகவும், சித்திரைத் திருவிழா காலத்தில் நீர், மோர் பந்தலாகவும் செயல்பட்டுள்ளது.அதன்பின் உணவகமாகச் செயல்பட்டுள்ளது. இந்நிலத்தின் உரிமையாளருக்கு வாரிசு இல்லாததால் மண்டபம் கோயிலுக்கு தானமாக வழங்கப்பட்டது என்ற தகவல் உள்ளது. இங்கு ஒரு சதுர வடிவ கிணறு, சில உரல்கள் காணப்படுகின்றன. கல்வெட்டு, சிற்பங்கள் இல்லை என்றார். தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி கூறியதாவது: வைணவ சமயத்தை ஆதரித்தவர்கள் மதுரையை ஆண்ட நாயக்க மன்னர்கள். ராணி மங்கம்மாள் காலத்தில் (17, 18ம் நுாற்றாண்டு) நெடுஞ்சாலையோரம் வழிப்போக்கர்கள் தங்கிச் செல்ல பல சத்திரங்கள் வைணவக் குறியீடுகளுடன் கட்டப்பட்டன.இந்த மண்டபமும் ஒரு சத்திரமாகச் செயல்பட்டு இருக்கலாம். தொல்லியல் துறையினர் பழமை தாங்கி நிற்கும் மண்டபங்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.