உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ராமேஸ்வரம் கோயிலில் ஸ்படிக லிங்க பூஜை இலவச தரிசனம் உயர்நீதிமன்றம் தள்ளுபடி

ராமேஸ்வரம் கோயிலில் ஸ்படிக லிங்க பூஜை இலவச தரிசனம் உயர்நீதிமன்றம் தள்ளுபடி

மதுரை : ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் கோயில் ஸ்படிக லிங்க பூஜைக்கு இலவச தரிசன வரிசை ஏற்படுத்த தாக்கலான வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது.திருச்சி ஸ்ரீரங்கம் கோபாலகிருஷ்ணன் தாக்கல் செய்த பொதுநல மனு:ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ஸ்படிக லிங்கம் பூஜை அதிகாலை 5:00 முதல் 5:30 மணிவரை நடைபெறுகிறது. இதற்கு தரிசன கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இலவச பொது தரிசன வரிசை ஏற்படுத்தாதது பக்தர்களுக்கு மன உளைச்சலை தருகிறது. இந்நடைமுறை ஹிந்து தர்மத்திற்கு எதிரானது.பாகுபாடின்றி கடவுளை வழிபட அனுமதிக்க வேண்டும். பொது இலவச தரிசன வரிசை ஏற்படுத்தக்கோரி அறநிலையத்துறை கமிஷனருக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.ஏற்கனவே விசாரணையின்போது நீதிபதிகள் அமர்வு: இதுபோன்ற நிவாரணம் வழங்க உத்தரவிட இயலாது. மனுதாரர் தொடர்ந்து இதுபோன்ற வழக்குகளை தாக்கல் செய்கிறார். அவரது பின்புலம் என்ன, அவருக்கு யாரும் பக்கபலமாக மறைமுக ஆதரவு தருகின்றனரா, எதிராக புகார் உள்ளதா என தனிப்படை போலீசார் மூலம் திருச்சி போலீஸ் கமிஷனர் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டனர்.நேற்று விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், ஜி.அருள்முருகன் அமர்வு: இவ்விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவு பிறப்பித்துள்ளது. அதை பின்பற்றி குறுகிய இடவசதி மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக ஸ்படிக லிங்க பூஜையில் 15 பேர் அனுமதிக்கப்படுகின்றனர். இதில் பாகுபாடு இல்லை. இது பற்றி தெரியாமல் மனுதாரர் இவ்வழக்கு தாக்கல் செய்துள்ளார். மனுதாரருக்கு எதிராக புகார் எதுவும் இல்லை என போலீஸ் கமிஷனர் அறிக்கை தாக்கல் செய்துள்ளார். மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை