| ADDED : ஜூன் 10, 2024 05:19 AM
மேலுார் : 'கேசம்பட்டியில் வாழும் அரியவகை உயிரினமான தேவாங்குகள் வாகனங்களில் அடிபட்டு அழிவதை தடுக்க சரணாலயம் அமைக்க வேண்டும்' என்பது சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.மேலுார், கேசம்பட்டியில் அரியவகை உயிரினமான செந்தேவாங்கு, சாம்பல் தேவாங்கு என்ற தேவாங்குகள் அதிகமாக காணப்படுகின்றன. இது பாலுாட்டி வகையை சேர்ந்தது. இப்பகுதியில் உள்ள பாறைக் குன்றுகள், மலைப்பகுதி மற்றும் அடர்ந்த காடுகளில் வாழ்கின்றன. சிறு விலங்கு, பறவைகளின் முட்டை, பல்லிகள், இலை தழைகளையும் உண்ணக்கூடியவை இத்தேவாங்குகள். இவற்றுக்கு திண்டுக்கல், கரூர் மாவட்டங்களில் சரணாலயம் உள்ளது.சமூக ஆர்வலர் ஜீவா கூறியதாவது: இப் பகுதியில் வாழும் தேவாங்குகள் இரவில் உணவு தேடி செல்லும் போது வாகனங்களில் அடிபட்டு இறக்கின்றன. இவ் விலங்குகள் மருத்துவகுணம் நிறைந்தவை என சிலர் நம்புவதால் வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் இவற்றை வேட்டையாடுகின்றனர். அதனால் அரியவகை உயிரினமான தேவாங்கு விரைவாக அழிந்து வருகிறது. வனத்துறையினர் இப் பகுதியில் ஆய்வு செய்து சரணாலயம் அமைத்து பாதுகாக்க முன் வரவேண்டும் என்றார்.