ஊருணி ஆக்கிரமிப்பை அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவு
மதுரை : உத்தங்குடி ஸ்ரீராம்நகர் விரிவாக்கம் குருநகர் குடியிருப்போர் நலச் சங்கம் துணைத் தலைவர் தவமணி. உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:உத்தங்குடியில் அரசு பள்ளி அருகே ஊருணி உள்ளது. பெரியாறு-வைகை பாசன கால்வாய் நீரை நம்பியுள்ளது. உத்தங்குடி முதல் விவசாயக் கல்லுாரிவரை ரோடு விரிவாக்கத்தின்போது கால்வாய் சேதமடைந்தது. நீர் வரத்து, வெளியேற்றம் தடைபட்டுள்ளது. கால்வாய் மற்றும் ஊருணியை சீரமைக்கக்கோரி கலெக்டருக்கு மனு அனுப்பினோம். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.புகழேந்தி அமர்வு:ஊருணியில் ஆக்கிரமிப்புகள் உள்ளது மாநகராட்சி அளவீடு செய்ததில் உறுதியாகியுள்ளது. ஊருணியில் மட்டுமன்றி அதன் நீர்வரத்து மற்றும் நீர் வெளியேறும் கால்வாய்களிலுள்ள ஆக்கிரமிப்புகளை 3 மாதங்களில் அகற்ற கலெக்டர், மாநகராட்சி கமிஷனர், பெரியாறு-வைகை பாசன கண்காணிப்பு பொறியாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டனர்.