| ADDED : ஜூலை 11, 2024 05:20 AM
மதுரை: மதுரை மடீட்சியா சார்பில் பொன்விழா ஆண்டு, விஸ்வேஸ்வரய்யா விருது வழங்கும் விழா மற்றும் மடீக்கான் தொழில் முனைவோர் மாநாடு ஜூலை 13, 14 ல் மதுரை கள்ளந்திரி ஏ.கே.என்.கே., பேலஸில் நடக்க உள்ளது.இதுகுறித்து மடீட்சியா தலைவர் லட்சுமி நாராயணன், கவுரவ தலைவர் கோடீஸ்வரன், நிர்வாகிகள் ராஜமுருகன், ஜெகபதிராஜன், முகமது யாசிக், சம்பத் கூறியதாவது:மதுரை அருகேயுள்ள மாவட்டங்களைச் சேர்ந்த 160 தொழில்முனைவோர்கள் விருதுக்கு விண்ணப்பித்தனர். இதில் 12 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஜூலை 13 ம் தேதி உற்பத்தித் தொழில் நிறுவனங்களுக்கு, விஸ்வேஸ்வரய்யா விருது வழங்கப்படுகிறது. டி.வி.எஸ்., மொபைலிட்டி சார்பில் சேவைத்தொழில்களுக்கும், சக்தி மசாலா சார்பில் பெண் தொழில்முனைவோருக்கும், மாபா நிறுவனம் சார்பில் புத்தொழில் நிறுவனங்களுக்கும் விருது வழங்கப்படுகிறது. தமிழ்நாடு சிட்கோ நிர்வாக இயக்குநர் மதுமதி, ஏற்றுமதி மேம்பாடு கைவினைப் பொருட்கள் குழும தென்மண்டலத் தலைவர் ஸ்ரீதேவி விழா மலரை வெளியிட உள்ளனர். ஜூலை 14ல் இளம் தொழில் முனைவோரை ஊக்குவிக்கும் வகையில் 'மடீக்கான்' மாநாடு நடக்கிறது. இதில் தொழிலில் சாதித்தவர்கள் தங்கள் அனுபவங்களை விவரிக்கின்றனர் என்றனர்.