காலையில் மருத்துவ முகாம்; மதியம் அவசர சிகிச்சை மதுரையில் நடமாடும் கால்நடை மருந்தகங்கள்
மதுரை : கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் மதுரையில் நடமாடும் கால்நடை மருந்தக வாகனத்தை கலெக்டர் சங்கீதா துவக்கி வைத்தார்.ஆக. 20 ல் நடமாடும் மருந்தக வாகனத்தை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். தமிழகத்திற்கு 200 வாகனங்கள் ஒதுக்கப்பட்டதில் மதுரைக்கு 5 வாகனங்கள் கிடைத்துள்ளன.தல்லாகுளம், திருமங்கலம், மேலுார், சேடபட்டி, உசிலம்பட்டி பகுதிகளில் இந்த வாகனங்கள் முகாம் அமைத்து செயல்படும் என கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநர் (பொறுப்பு) நந்தகோபால் தெரிவித்தார்.அவர் கூறியதாவது: கால்நடை மருத்துவமனை, மருந்தகங்களில் இருந்து 5 கி.மீ., தொலைவில் இந்த நடமாடும் மருத்துவ வாகனங்கள் செயல்படும். தினமும் 2 கிராமங்கள் வீதம் காலை 8:00 முதல் மதியம் 2:00 மணி வரை கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்துவது, குடற்புழு நீக்கம் உள்ளிட்ட பணிகள் செய்யப்படும். மதியம் 2:00 முதல் மாலை 5:00 மணி வரை அவசர சிகிச்சை வாகனமாக தேவைப்படும் இடங்களுக்கு செல்லும். மதுரையில் ஏற்கனவே மொபைல் ஆம்புலன்ஸ் உள்ளதால் அதே 1962 என்ற அவசர எண்ணைத் தொடர்பு கொண்டால் போதும்.ஞாயிறு முகாம் கிடையாது. இந்த வாகனத்தில் ஒரு டாக்டர், டிரைவர், உதவியாளர் இருப்பர். மத்திய, மாநில அரசு நிதியில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது என்றார்.