| ADDED : ஜூலை 31, 2024 06:12 AM
திருமங்கலம் : மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் ராணுவ வீரரை வேன் ஏற்றி கொலை செய்து விட்டு விபத்து என நாடகமாடிய மனைவி, மகன் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். திருமங்கலம் அசோக்நகர் ராணுவ வீரர் தர்மலிங்கம் 42. இவரது மனைவி ஜோதி 36, மகன் சஞ்சய் 18. கடந்தாண்டு தர்மலிங்கம் விடுமுறையில் வந்தார். 2023 ஏப்.,3 ல் திருமங்கலம் விமான நிலைய ரோட்டில் விடத்தகுளம் அருகே இரவில் டூவீலரில் சென்ற போது மினி வேன் மோதி இறந்தார். திருமங்கலம் தாலுகா போலீசார் விசாரித்தனர். பிரேத பரிசோதனை அறிக்கை, தொடர் விசாரணையில் வேன் ஏற்றி கொலை செய்ததும், கள்ளக்காதல் விவகாரத்தில் கணவரை கொலை செய்துவிட்டு மனைவி நாடகமாடியதும் தெரிந்தது.போலீசார் கூறியதாவது: கள்ளிக்குடி அருகே கல்லணையைச் சேர்ந்த ஜோதியும், உலகாணி பால்பாண்டியும் காதலித்தனர். ஆனால் ஜோதியை தர்மலிங்கத்திற்கு பெற்றோர் திருமணம் செய்து வைத்தனர். ஆனாலும் பால்பாண்டியுடன் ஜோதி தொடர்பில் இருந்தார். இதை தர்மலிங்கம் கண்டிக்கவே அவரை கொலை செய்ய ஜோதி முடிவு செய்தார். இதற்கு மகனும் உடந்தையாக இருந்தார். விடுமுறையில் வந்த தர்மலிங்கத்தை பால்பாண்டியின் தம்பி உக்கிரபாண்டி ஏற்பாட்டில் மதுரை சிந்தாமணி மினிவேன் டிரைவர் பாண்டி 40, கிளீனர் அருண்குமார் 38, ஆகியோர் வேனை மோத செய்து கொலை செய்தனர். இவ்வழக்கில் ஜோதி, மகன் சஞ்சய், டிரைவர் பாண்டி, கிளீனர் அருண்குமார், உக்கிரபாண்டி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பால்பாண்டி உட்பட 5 பேரை தேடி வருகிறோம் என்றனர்.