உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / 100லிருந்து 120: மதுரை மாநகராட்சி வார்டுகள் எண்ணிக்கை உயர்கிறது: வெளியானது உத்தேச எல்லை விரிவாக்கம் வரைபடம்

100லிருந்து 120: மதுரை மாநகராட்சி வார்டுகள் எண்ணிக்கை உயர்கிறது: வெளியானது உத்தேச எல்லை விரிவாக்கம் வரைபடம்

மதுரை: மதுரை மாநகராட்சியில் 100 ல் இருந்து 120 வார்டுகளாக அதிகரிக்கப்பதற்கான அனைத்து பணிகளும் முடிவுற்ற நிலையில் அதற்கான உத்தேச எல்லைகள் விரிவாக்கம் வரைபடம் வெளியாகி உள்ளது. இதன் மூலம் மேலும் ஒரு மண்டலம் உருவாகிறது.மக்கள் தொகைக்கு ஏற்ப மாநகராட்சி எல்லை விரிவாக்கம் மேற்கொள்ளும் பணிகள் கலெக்டர் சங்கீதா, மாநகராட்சி கமிஷனர் தினேஷ்குமார் தலைமையில் பல்வேறு ஆய்வுக் கூட்டங்கள் நடந்தன. இதையடுத்து மாநகராட்சி எல்லையை சுற்றி ஒரு டவுன் பஞ்சாயத்து, 16 கிராம பஞ்சாயத்துகளை மாநகராட்சியுடன் இணைக்க முடிவானது. இதன் மூலம் மாநகராட்சியின் மொத்த மக்கள் தொகை 18 லட்சத்து 72 ஆயிரமாக உயரும்.

இணைக்கப்படும் பகுதிகள்

பரவை (டவுன் பஞ்சாயத்து), கருப்பாயூரணி, ஒத்தக்கடை, நரசிங்கம், காதக்கிணறு, செட்டிகுளம், கோவில்பாப்பாகுடி, ஆலாத்துார், பேச்சிகுளம், விரகனுார், நாகமலை புதுக்கோட்டை, கரடிபட்டி, ஏற்குடி அச்சம்பத்து, துவரிமான், பெருங்குடி (பகுதி), அரும்பனுார் (பகுதி), கொடிக்குளம் ஆகிய கிராம பஞ்சாயத்துகள் இணைக்கப்பட்டு புதிய உத்தேச மாநகராட்சி வரைபடம் வெளியிடப்பட்டுள்ளது.அதிகாரி ஒருவர் கூறியதாவது: நகராட்சி நிர்வாகம் 2023 திருத்த சட்டத்தின்படி 15 லட்சம் மக்கள் தொகை கொண்ட மாநகராட்சிக்கு 100 வார்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. 20 முதல் 30 லட்சம் மக்கள் தொகை இருந்தால் 120 வார்டுகள் உருவாக்கலாம். 30 முதல் 40 லட்சம் மக்கள் தொகைக்கு 140 வார்டுகள் ஏற்படுத்தலாம். மதுரையில் தற்போது 18 லட்சம் மக்கள் தொகை இருக்கலாம் என்ற கணிப்பில் 100ல் இருந்து 120 வார்டுகளாக அதிகரிக்க வாய்ப்புள்ளது. 5 மண்டலங்களில் இருந்து 6ஆக உயரும். வார்டுகள் வரையறை இனிமேல் முடிவு செய்யப்படும்.ஒத்தக்கடை பகுதியில் குவாரிகள் அதிகம் உள்ளன. இதுபோல் பல இணைக்கப்படவுள்ள பகுதிகளில் நீர்நிலைகள் அதிகம் உள்ளன. இதையெல்லாம் கவனத்தில் கொண்டு வார்டுகள் வரையறை செய்யப்படும். இந்த விரிவாக்கத்தில் வடக்கில் அழகர்கோவில் வரையும், மேற்கில் மதுரை காமராஜ் பல்கலை, தென்மேற்கில் கப்பலுார் சிப்காட் வரையும் மாநகராட்சி எல்லைக்குள் கொண்டுவர வேண்டும் என வர்த்தகர்கள், அரசியல் கட்சியினர், மக்கள் வலியுறுத்தியுள்ளனர். அதுதொடர்பாக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என்றார்.

* தற்போதைய மாநகராட்சியின் சதுர கிலோ மீட்டர்: 147.99

* மக்கள் தொகை (2011ன் படி) 15,73,616* எதிர்பார்க்கப்படும் மக்கள் தொகை: 18,72,000----


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

A Sridhar
ஜன 02, 2025 00:29

ஐயா வணக்கம், மாநில அரசு அலுவலகம் வாரத்தில் ஆறு நாட்கள் அதாவது திங்கள் கிழமை முதல் சனிக்கிழமை வரை அரசு அலுவலக உயர் அதிகாரிகள் வரை கடைநிலை ஊழியர்கள் வேலை செய்ய வேண்டும்.


A Sridhar
ஜன 02, 2025 00:23

ஐயா வணக்கம் தமுக்கம் பேருந்து நிறுத்தம் அவல நிலையை பார்க்க வேண்டும். தொகுதி நிதி மூலமாக லட்சக்கணக்கில் கட்டப்பட்டது. சமூக விரோதி கூடாரமாக உள்ளது. இதற்கு மாநகராட்சி செப்பனிட கூடிய விரைவில் முன் வர வேண்டும்.


A Sridhar
ஜன 01, 2025 20:22

ஐயா வணக்கம் மதுரை சக்கிமங்கலம் இருந்து பெரியார் பேருந்து நிலையம் வழி தெற்குவாசல். ஆனால் சிம்மக்கல் வழியாக கூடிய விரைவில் பேருந்து இயக்க வேண்டும். மற்றும் ஆரப்பாளையம், மாட்டுத்தாவணிக்கும் பேருந்து இயக்க வேண்டும்.


A Sridhar
ஜன 01, 2025 18:18

ஐயா வணக்கம் மதுரை நகர் முழுவதும் ஒட்டு மொத்த சாலைகள் அமைக்க அதிகாரிகளுக்கு கவனத்திற்கு வரவில்லை போலும். மதுரை நகரில் நடைமேடை என்பதே இல்லை. அண்ணா பேருந்து நிலையம் அகற்றுவது உத்தமம். தெப்பக்குளம் சுற்றி இரும்பு வேலி அமைக்க அரசு முன் வர வேண்டும்.


V வைகுண்டேஸ்வரன்
டிச 31, 2024 17:04

ப்ப்பா சாமி, யாருய்யா நீங்கல்லாம்?? எந்த செய்தி போட்டாலும் உடனே அதுக்கு எதிர்மறை விமர்சனம் எப்படிய்யா எழுத முடிகிறது? பிறந்த பொன்னாட்டிற்கு எதிராகவே எழுதிக்கொண்டே இருக்க எப்படி முடிகிறது?? Hats off


A Sridhar
டிச 31, 2024 15:45

ஐயா வணக்கம் மதுரை மாநகராட்சி விரிவாக்கம் செய்ய இருக்கும் செலவு தொகையை இருக்கிற ஐந்து மண்டலங்களில் அடிப்படை வசதி செய்து கொடுத்தாள் மிக நன்றாக இருக்கும். தமிழ்நாட்டில் மற்ற மாவட்ட மாநகராட்சி பார்க்கும் பொழுது மிக மோசமான எந்த வித விதமான அடிப்படை வசதி இல்லை. இது தொடர்பாக எந்த உயர் அதிகாரிகள் பொறுப்பு ஏற்று செய்யவில்லை.


A.Gomathinayagam
டிச 31, 2024 13:59

விரிவாக்கம் எல்லா அடைப்படை வசதிகள் கொண்டதாக இருக்க வேண்டும் .வெறுமெனே பஞ்சாயத்து என்கின்ற பெயர் பலகையை மாநகராட்சி என்று மாற்றுவதால் மக்களுக்கு எந்த நன்மையையும் கிடைக்கப்போவதில்லை


Savari Muthu001
டிச 31, 2024 10:20

10 years ago TN Gov ward extended 100 in MDU That was not devoloped yet. particularly street road UGD and more ,first should be completed the development ,ofter extend the ward. that is correct I think.


kumaresan
டிச 31, 2024 09:56

வீட்டு வரி உயர்த்துவதற்கு தான் இது செய்யப்படுகிறது. மதுரை கே கே நகரின் அருகில் உள்ள மாணகிரி, வில்லாபுரம், அவனியாபுரம் பகுதிகள் மாநகராட்சியில் சேர்த்து பல வருடங்கள் ஆகின்றன. இன்னும் ட்ரைனேஜ் உள்கட்டமைப்பு கூட சரியில்லை. ஆனால் வீட்டு வரி மட்டும் 20 மடங்கிற்கு மேல் ஏற்றி இருக்கிறார்கள் .


Ramasamy pandy
டிச 31, 2024 09:40

மதுரை மாநகராட்சியுடன் புதியதாக இனைக்கும் பகுதிகள் கொண்டு வார்டு வரைமுறைபடுத்தும் போது அந்தத்தபகுதிகள் உள்ளடக்கிய முறையில் வார்டு வரைமுறைபடுத்த வேண்டுவதுடன் புதியவார்டு வாக்காளர்கள் 10000 க்குள் இருக்குமாறு நடவடிக்கை எடுக்கவேண்டும்.


புதிய வீடியோ