மாநகராட்சியில் 25 சுகாதார ஆய்வாளர்கள் மாற்றம்: சவாலாகுது எஸ்.ஐ.ஆர்., பணிகள்
மதுரை: மதுரை மாநகராட்சியில் பொறியாளர்களையடுத்து 25 சுகாதாரப் பணியாளர்களுக்கும் வார்டுகள் மாற்றி உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்.ஐ.ஆர்.,) பணிகள் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தேர்தல் கமிஷன் உத்தரவால் மாநகராட்சியில் 100 வார்டுகளிலும் எஸ்.ஐ.ஆர்., பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. இப்பணியில் அந்தந்த வார்டு உதவி, இளநிலை பொறியாளர்கள் (ஏ.இ., ஜெ.இ.,க்கள்), சுகாதார ஆய்வாளர்கள் (எஸ்.ஐ.,), பில் கலெக்டர்களுக்கு கண்காணிப்பாளர் பணி ஒதுக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு கீழ் சம்பந்தப்பட்ட வார்டுக்கான பி.எல்.ஓ.,க்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஒரு கண்காணிப்பாளருக்கு 12 ஆயிரம் முதல் 15 ஆயிரம் விண்ணப் பங்கள் சரிபார்க்க வழங்கப்பட்டுள்ளன. கண்காணிப்பாளர் பொறுப்பில் உள்ள ஏ.இ., எஸ்.ஐ.,க்கள் வேறு வார்டுகளுக்கு மாற்றப்பட்டாலும் பழைய வார்டில் தான் எஸ்.ஐ.ஆர்., பணியை மேற்கொள்ளும் நிலை உள்ளது. பொறியியல் பிரிவில் ஏற்கனவே உதவி, இளநிலை பொறியாளர்கள் பலர் சில நாட்களுக்கு முன் வேறு வார்டுகளுக்கு மாற்றப்பட்டபோது சர்ச்சையானது. அவர்கள் எஸ்.ஐ.ஆர்., பணியை பழைய வார்டுகளுக்கு சென்று கவனிப்பதில் பெரும் சவாலாக உள்ளது. பொறுப்பேற்ற புதிய வார்டிலும் வழக்கமான பணிகளை மேற்கொள்ள முடியவில்லை என புலம்பினர். இந்நிலையில், சுகாதாரப் பிரிவிலும் 25 எஸ்.ஐ.,க்கள் மாற்றப்பட்டுள்ளனர். இதனால் மாநகராட்சி பகுதியில் எஸ்.ஐ.ஆர்., பணிகள் பெரும் சவாலாக உள்ளது என சர்ச்சை ஏற்பட்டு உள்ளது. இதுகுறித்து துாய்மை அலுவலர்கள் கூறுகையில், ''வார்டு மாற்றம் எங்களுக்கு புதிதல்ல. அதேநேரம் எஸ்.ஐ.ஆர்., பணிகளையும் சம்பந்தப்பட்ட வார்டுக்கு மாற்றம் செய்ய வேண்டும். வெவ்வேறு வார்டுகளில் மேற்கொள்ளவுள்ள இந்த இரண்டு பணிகளால் மனஉளைச்சல் ஏற்படுகிறது. இந்த மாற்றத்தில் எஸ்.ஐ.,க்கள் பலருக்கு 'சலுகை' காட்டப்பட்டுள்ளது. இதன் பின்னணி குறித்து விசாரிக்க வேண்டும்'' என்றனர்.
டிரான்ஸ்பர் உத்தரவும் நிஜமும்
மாநகராட்சி மாற்றம் உத்தரவில் '3 துாய்மை அலுவலர், 25 துாய்மை ஆய்வாளர் பொது நிர்வாக நலன் கருதி மாற்றப்பட்டுள்ளனர்' என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் 7 எஸ்.ஐ.,க்களுக்கு மட்டுமே வார்டுகள் மாற்றப்பட்டுள்ளன. 2 எஸ்.ஐ.,க்களுக்கு வருவாய் தரும் வார்டுகள் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளன. பிறர் ஏற்கனவே பணியாற்றிய வார்டுகளை தான் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளன. மேலும் மண்டலம் 1ல் உள்ள ஒரு எஸ்.ஐ., 5 ஆண்டுகளாக அதே வார்டுகளில் பணியாற்றுகிறார். நகராட்சிகளில் இருந்து மாற்றுப்பணியாக மாநகராட்சிகளில் நியமிக்கப்பட்டவர்கள் தமிழகம் முழுவதும் நகராட்சிக்கே திரும்ப செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி அனைத்து மாநகராட்சிகளிலும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மதுரை மாநகராட்சியில் மாற்றுப்பணியில் இருந்த 7 பேரில் 6 பேர் நகராட்சிகளுக்கு மாற்றப்பட்டனர். ஆனால் ஒரு பெண் எஸ்.ஐ., மட்டும் மூன்று மாதங்களாக மாற்றப்படாமல் நீடிக்கிறார். இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.