| ADDED : மார் 14, 2024 04:19 AM
மதுரை: மதுரை காமராஜ் பல்கலையில் நிலவும் சம்பளம், ஓய்வூதிய பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என கல்விப்பேரவை கூட்டத்தில் உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.மதுரை காமராஜ் பல்கலை கல்வி பேரவைக் கூட்டம் (அகாடமி கவுன்சில்) நேற்று நடந்தது. துணைவேந்தர் ஜெ.குமார் தலைமையில் நடந்த கூட்டத்தில் பதிவாளர் ராமகிருஷ்ணன், சிண்டிகேட் உறுப்பினர்கள் தவமணி கிறிஸ்டோபர், புஷ்பராஜ் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.கூட்டத்தில் இப்பல்கலையை சார்ந்த கல்லுாரிகளில் படித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்குவதில் உள்ள தாமதத்தை தவிர்த்து துரிதமாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பல்கலையின் நிதி நெருக்கடியை போக்கி, தாமதமின்றி பேராசிரியர்கள், அலுவலர்கள், ஊழியர்கள் சம்பளம், ஓய்வூதியம் வழங்க நிரந்தர தீர்வு காண நடவடிக்கை தேவை போன்ற பல்வேறு பொருள் குறித்து கல்விப் பேரவை உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர்.இதற்கிடையில் சம்பள பிரச்னை குறித்து சிண்டிகேட் உறுப்பினர் புஷ்பராஜ் பேசுகையில், பல்கலை ஊழியர்களின் சம்பளம், ஓயவூதியம் தொடர்பான கோப்பு கல்லுாரி கல்வி இயக்குநரகத்தில் இருந்து மாற்றப்பட்டுள்ளது. இன்னும் ஓரிரு நிலுவை சம்பளம் கிடைக்க வாய்ப்புள்ளது. இது ஒரு தற்காலிக தீர்வுதான். மார்ச் மாத சம்பளத்திற்கான செயல்முறை ஏற்கனவே நடக்கிறது. இதற்கான நடவடிக்கை அரசு மட்டத்தில் தொடங்கியுள்ளது.இப்பல்கலையில் நிலுவையில் உள்ள சம்பளத்தை வழங்குவதில் உள்ள பிரச்னைகளை தீர்க்க, விரைவில் சிறப்புக் குழு அமைக்கப்படலாம் என எதிர்பார்க்கிறோம்'' என்றார்.