உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / அரசு பள்ளிகளில் புத்தகம், நோட்டு வந்தாச்சு சார் பேக் வரல: முதல் நாளில் வழங்கப்படும் என்பது என்னாச்சு

அரசு பள்ளிகளில் புத்தகம், நோட்டு வந்தாச்சு சார் பேக் வரல: முதல் நாளில் வழங்கப்படும் என்பது என்னாச்சு

கோடை விடுமுறைக்கு பின் நேற்று பள்ளி திறக்கப்பட்ட முதல்நாளில் மாவட்டத்தில் 1536 பள்ளிகளில் 8ம் வகுப்பு வரை சத்துணவு சாப்பிடும் மாணவர்களுக்கு அரசு நலத்திட்டங்கள் வழங்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. அமைச்சர் மூர்த்தி ஒத்தக்கடை அரசு பள்ளியில் நோட்டு புத்தகங்கள் வழங்கி துவக்கினார். இதுபோல் டி.இ.ஓ.,க்கள் உள்ளிட்டகல்வி அதிகாரிகள் முன்னிலையில் பல்வேறு பள்ளிகளில் நோட்டு, புத்தகம், இலவச சீருடை, காலணி உள்ளிட்டவை வழங்கப்பட்டன. ஆனால் இந்தாண்டு நோட்டு புத்தகங்களை கொண்டு செல்வதற்கான 'பேக்' மாணவர்களுக்கு வழங்கப்படவில்லை.ஆசிரியர்கள் கூறுகையில், இதுகுறித்து அதிகாரிகளிடம் தெரிவித்தோம். 'பேக்' வழங்குவதற்கான ஒப்பந்தம் பெற்ற நிறுவனம்அதுதொடர்பான தரம் குறித்து முன்அனுமதி பெறுவதில் தாமதம் ஏற்பட்டதால் மாவட்ட நோடல் மையங்களுக்கு அவற்றை அனுப்பி வைப்பதிலும் தாமதமாகிவிட்டது. இதனால் முதல் நாளில் வழங்க முடியவில்லை என்றனர்.அதிகாரி ஒருவர் கூறுகையில், மாவட்டத்தில் அரசு, உதவி பெறும் பள்ளிகளில் சத்துணவு சாப்பிடும் ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 891 மாணவர்களுக்கு நலத் திட்டங்கள் வரப்பெற்றுள்ளன. முதல் நாளில் புத்தகம், நோட்டு, காலணி, சீருடை போன்றவை வழங்கப்பட்டன. 'பேக்' கொண்டுவருவதில் தாமதம் ஏற்பட்டது. இருப்பினும் நேற்று பிற்பகல் நோடல் மையங்களுக்கு கொண்டு வரப்பட்டன. விரைவில் வழங்கப்படும் என்றார்.

யார் கடிவாளமிடுவது

அரசு நலத்திட்டங்களை நோடல் மையங்களில் இருந்து அரசு, உதவி பெறும் பள்ளிகளுக்கு கொண்டு செல்ல வாகனங்கள் ஏற்பாடு செய்ய கல்வித்துறை நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. ஆசிரியர்கள் மூலம் கட்டாயம் எடுத்துச்செல்லக் கூடாது என உத்தரவு உள்ளது. ஆனால் பல மாவட்டங்களில் இந்த நிதியை அதிகாரிகள் பயன்படுத்தாமல், ஆசிரியர்களையே வாகன வசதி ஏற்பாடு செய்து பள்ளிகளுக்கு நோட்டு புத்தகங்கள் எடுத்துச் செல்வதாக புகார் எழுந்தது. அதிகாரிகள் எச்சரிக்கைக்கு பின் இச்செயல்பாடு குறைந்தது. ஆனாலும் மதுரையில் நேற்று சில பள்ளிகளில் ஆசிரியர்களே நோடல் மையங்களுக்கு சென்று நோட்டு புத்தகங்களை எடுத்துச் சென்றுள்ளதாக புகார் எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

m.arunachalam
ஜூன் 03, 2025 17:59

பலநிலை கடந்துதான் இங்கும் எங்கும் விநியோகம் நடக்க வேண்டியுள்ளது . எல்லாவற்றையும் விமர்சித்தால் அது நல்ல செயலா ?


மூர்க்கன்
ஜூன் 03, 2025 13:06

எதை செய்தாலும் குறை சொல்லும் ...களை கண்டு கொள்ள கூடாது. இன்னும் நிதியை விடுவிக்காத குன்றியத்தை கேள்வி கேளுங்கள் ?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை