தேனீ வளர்ப்பு பெட்டிகள் கொள்முதல் செய்ய வழக்கு
மதுரை: தேனீ வளர்ப்பு பெட்டிகள் கொள்முதல் செய்ய தாக்கலான வழக்கில் மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. மதுரை மாவட்டம் ராமராஜபுரம் முருகன் தாக்கல் செய்த பொதுநல மனு: தமிழகத்தில் தேனீ வளர்ப்பு திட்டம் மத்திய அரசின் நிதி உதவியுடன் செயல்படுத்தப்படுகிறது. விவசாயிகளுக்கு மானிய விலையில் தேனீ வளர்ப்பு (பெட்டிகள்) கூடுகள் வழங்கப்படுகிறது. பிற மாநிலங்கள் பயனாளிகளை அடையாளம் கண்டுள்ளன. அவர்களுக்கு வழங்க தேனீ வளர்ப்பு பெட்டிகள் கொள்முதல் செய்ய டெண்டர் கோரப்பட்டது. குறைந்த தொகை கோரிய நிறுவனத்திற்கு டெண்டர் அனுமதிக்கப்பட்டது. தமிழகத்தில் டெண்டர் நடத்தாமல் கொள்முதல் செய்ய சிலருக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. வெளிப்படைத்தன்மையுடன் இ-டெண்டர் நடத்தி தேனீ வளர்ப்பு பெட்டிகளை கொள்முதல் செய்து வினியோகிக்க வேண்டும். கடந்த 5 ஆண்டுகளில் பயனாளிகள், ஒப்பந்தாரர்கள் விபரங்களை தாக்கல் செய்ய மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டார். நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஜி.அருள்முருகன் அமர்வு விசாரித்தது. மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் நிரஞ்சன் எஸ்.குமார் ஆஜரானர். நீதிபதிகள் மத்திய, மாநில வேளாண்துறை செயலர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி 2 வாரங்களில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தர விட்டனர்.