அஜித்குமார் இறந்த வழக்கு ஆவணங்களை ஒப்படைக்குமாறு போலீசிற்கு சி.பி.ஐ., கடிதம்
மதுரை: சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் இறந்த வழக்கை விசாரிக்கும் சி.பி.ஐ., அதிகாரிகள், தங்களுக்கு தேவையான ஆவணங்களை வழங்கும்படி விசாரணை அதிகாரியான ஏ.டி.எஸ்.பி., சுகுமாறனுக்கு கடிதம் எழுதி கேட்டுள்ளனர். திருப்புவனம் அரசு மருத்துவமனைக்கு வரும் வழியில் இறந்துவிட்டதாக இறப்பு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியைச் சேர்ந்த பேராசிரியை நிகிதா, தாயாருடன் சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் மடப்புரம் காளி கோயிலுக்கு ஜூன் 28ல் சென்றபோது காரில் இருந்த நகை மாயமானது. இதுதொடர்பாககோயில் காவலாளி அஜித்குமாரை 28, போலீசார் விசாரித்தபோது இறந்தார்.இவ்வழக்கில் தனிப்படைபோலீசார் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுபடி ஜூலை 12 முதல் டி.எஸ்.பி., மோஹித்குமார் தலைமையிலான டில்லி சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். அஜித்குமார் வழக்கு விசாரணை ஆவணங்களை உயர்நீதிமன்ற மதுரை கிளை பதிவாளரிடம் பெற்ற நிலையில், போலீஸ் தரப்பில் பராமரிக்கப்படும் ஆவணங்களை தங்களிடம் ஒப்படைக்குமாறு விசாரணை அதிகாரியான ஏ.டி.எஸ்.பி., சுகுமாறனுக்கு கடிதம் எழுதியுள்ளனர். தங்களிடம் உள்ள ஆவணங்களை நீதிமன்றத்திடம் ஒப்படைத்துவிட்டதாக போலீஸ் தரப்பில் சி.பி.ஐ.,க்கு தெரிவிக்கப்பட்டது.சி.பி.ஐ., அதிகாரிகள் இன்னும் முழுமையாக விசாரணைக்குள் இறங்கவில்லை. ஆவணங்களை சேகரிப்பதில் ஆர்வமாக உள்ளனர். திருப்புவனம் இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார் உள்ளிட்டோரிடம் சம்பவம் குறித்து விசாரித்துள்ளனர். சி.பி.ஐ., குழுவில் 6 பேர் உள்ளனர். பெரும்பாலும் ஆங்கிலத்திலேயே கேள்வி கேட்கின்றனர். தமிழில் பதில் சொல்லும்போது அதை புரிந்துக்கொள்கின்றனர். பேச்சின் பொருள் புரியாதபட்சத்தில் அந்த குழுவில் உள்ள தமிழ் தெரிந்த போலீஸ்காரர்களிடம் விளக்கம் கேட்டுக்கொள்கின்றனர். இதற்கிடையே இவ்வழக்கில் கைதாகி உள்ள போலீசாரை மதுரை சிறைக்கே சென்று அடுத்த வாரம் விசாரிக்க திட்டமிட்டுள்ளனர்.
இறப்பு சான்றுக்கு அலைக்கழிப்பு
அஜித்குமார் இறப்பு சான்று பெற அவரது தம்பி நவீன்குமார் மதுரை அரசு மருத்துவமனையில் முயற்சித்தார். அங்கு போலீசாரிடம் இருந்து இறப்பு அறிக்கை பெற்று, அந்த அறிக்கையுடன் மனு செய்தால் மட்டுமே இறப்பு சான்று வழங்கப்படும் என தெரிவித்து விட்டனர். இதையடுத்து திருப்புவனம் போலீஸ் ஸ்டேஷனில் இறப்பு அறிக்கை கேட்ட நவீன்குமார், அவரது தாயிடம் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி விட்டதாக கூறி அலைக்கழிப்பு செய்தனர். இது குறித்து நவீன்குமார் மதுரை, சிவகங்கை கலெக்டர்கள், எஸ்.பி.,க்களிடம் புகார் அளித்துள்ளார்.இந்நிலையில் நேற்று மதியம் 3:15 மணிக்கு திருப்புவனம் அரசு மருத்துவமனை சார்பில் அஜித்குமார் இறப்பு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. அதில் திருப்புவனம் அரசு மருத்துவமனைக்கு வரும் வழியில் அவர் இறந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.