| ADDED : மார் 09, 2024 07:49 AM
சிலைமான் : சிவராத்திரியையொட்டி மதுரை விரகனுார் ரிங்ரோடு நேற்று போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவித்தது.விரகனுார் ரிங்ரோடு பகுதி மதுரையில் இருந்து சென்னை, ராமேஸ்வரம், திருநெல்வேலி உள்ளிட்ட ஊர்களுக்கு செல்லும் ரோடுகளை இணைப்பதாக உள்ளது. இந்த ரோட்டில் சந்திப்பு பகுதியில், பெரிய ரவுண்டானா அமைக்கப்பட்டுள்ளது.நேற்று மகா சிவராத்திரி திருவிழாவையொட்டி ஏராளமானோர் குலதெய்வ வழிபாடுகளுக்காக குடும்பத்துடன் வெளியூர்களுக்கு புறப்பட்டுச் சென்றனர்.ஒரே நேரத்தில் ஏராளமானோர் பஸ், கார், வேன், டூவீலர் என பல வாகனங்களில் புறப்பட்டதால் விரகனுார் ரிங்ரோட்டின் நான்குபுறமும் நெரிசல் ஏற்பட்டு, நீண்ட வரிசையில் வாகனங்கள் அணி வகுத்தன.போக்குவரத்து போலீசார் நெரிசலை கட்டுப்படுத்தினர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், ''இந்த ரவுண்டானா பகுதி வைகையாற்று கரையோர ரோட்டுடன் 7 ரோடுகளை இணைக்கிறது. இப்பகுதியில் சிக்னல் இல்லை. நான்கு வழிச்சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் இப்பகுதியில் பாலம் தேவை என கூறுகின்றனர்.இதுபோல் விழாக்காலங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அதிக எண்ணிக்கையில் போலீஸ், ஊர்காவல் படை உதவியுடன் நெரிலை கட்டுப்படுத்தி வருகிறோம் என்றார்.