புது தாலுகா உருவாக்க பரிசீலனை: கோர்ட் தகவல் உயர்நீதிமன்றத்தில் தகவல்
மதுரை : புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் புது தாலுகா உருவாக்க தாக்கலான வழக்கில், அரசின் பரிசீலனையில் உள்ளதாக அதன் தரப்பில் தெரிவித்ததால் பைசல் செய்தது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை. அரிமளம் அண்ணாமலை தாக்கல் செய்த பொதுநல மனு:
அரிமளம் ஒன்றியத்தில் 32 கிராம ஊராட்சிகள் உள்ளன. திருமயம் தாலுகாவில் இடம் பெற்றுள்ளது. அரசின் திட்டங்கள், வாரிசு, வருமான சான்று பெற, பட்டா மாறுதலுக்கு அரிமளத்திலிருந்து திருமயம் தாலுகா அலுவலகத்திற்கு 20 கி.மீ., பயணம் செய்ய வேண்டியுள்ளது. போதிய போக்குவரத்து வசதி இல்லை. அரிமளத்தை தனி தாலுகாவாக உருவாக்க தமிழக வருவாய்த்துறை செயலருக்கு மனு அனுப்பினேன். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு குறிப்பிட்டார். நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஜி.அருள்முருகன் அமர்வு விசாரித்தது. அரசு வழக்கறிஞர் அசோக்,'கலெக்டர் சமர்ப்பித்த பரிந்துரை அரசின் பரிசீலனைக்காக நிலுவையில் உள்ளது,' என்றார். நீதிபதிகள்,'மனுவில் கோரிய நிவாரணத்தை இந்நீதிமன்றம் வழங்க முடியாது. வழக்கு பைசல் செய்யப்படுகிறது,' என உத்தரவிட்டனர்.