விளைநிலத்தை வளமாக்க சணப்புச் செடிகள் சாகுபடி
வாடிப்பட்டி: வாடிப்பட்டி, அலங்காநல்லுார் பகுதிகளில் விளை நிலங்களுக்கு இயற்கை உரம் சேர்க்க விவசாயிகள் சணப்புச் செடி சாகுபடியில் ஈடுபடுகின்றனர்.இப்பகுதிகளில் நெல் அறுவடை பணிகள் முடிந்துள்ளது. விவசாய நிலங்களில் தொடர்ந்து பயிர் செய்வது, ரசாயன உரங்களை பயன்படுத்து போன்றவற்றால் மண்ணின் வளம் குறைகிறது.இதனை மீட்டெடுத்தால்தான் அடுத்த சாகுபடி சிறப்பாக இருக்கும். அதற்கேற்ப மண்வளத்தை அதிகரிக்க சணப்பு, தக்கைப்பூண்டு, கொழிஞ்சி செடிகளை நிலங்களில் வளர்க்கின்றனர்.இவை வேகமாக வளரக்கூடியவை. விளைநிலத்தில் 30 முதல் 40 நாட்களில் வளர்ந்து பூக்கும் நேரத்தில், அவற்றை அப்படியே உழவு செய்து டிராக்டரால் மண்ணில் மடக்கி அடித்து புதைத்து விடுகின்றனர். இச்செடிகள் மண்ணில் மட்கி வளமாக மாறுகிறது. இயற்கை உரமாக மாறுவதால் சணப்புப் பயிரை அதிகளவு பயிரிட துவங்கியுள்ளனர்.வைகை பெரியாறு அணை நிலவரத்தை பொறுத்து பாசனம் பெறும் விவசாயிகள் சணப்பு நட உள்ளனர். இந்த இயற்கை உரம் மூலம் நெல் மகசூல் அதிகரிக்கும் என விவசாயிகள் தெரிவித்தனர்.