3 மாதங்களில் 100க்கும் மேற்பட்டோருக்கு நாய்க்கடி திருமங்கலத்தில் பீதி
திருமங்கலம் : திருமங்கலத்தில் நடந்து சென்ற சிறுவனை நாய் ஒன்று கடித்தது. கடந்த 3 மாதத்தில் 100க்கும் மேற்பட்டோர் நாய்க்கடிக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளனர். திருமங்கலம் கொடிமரத் தெரு அல்லிமாராணியின் மகன் சவுபிக்கலான் 6. நேற்று முன்தினம் இரவு வீட்டருகே நடந்து சென்ற போது தெரு நாய் கடித்தது. அவ்வழியே வந்தவர்கள் விரட்டி சிறுவனை காப்பாற்றினர்.சிறுவனின் கை, கால்களில் காயம் ஏற்பட்டது. திருமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. திருமங்கலம் நகராட்சியின் அனைத்து வார்டுகளிலும் தெருநாய்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சில மாதங்களுக்கு முன்பு நாய்களுக்கு குடும்ப கட்டுப்பாட்டு சிகிச்சை செய்த போதும் எண்ணிக்கை குறைவதற்கு பதில் அதிகரித்துள்ளது.கடந்த 3 மாதங்களில் 100க்கும் மேற்பட்டோர் நாய்க் கடிக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றனர். எனவே நாய்களின் எண்ணிக்கையை முழுமையாக கட்டுப்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.