ஓடையை ரோடாக மாற்றி ஆக்கிரமிப்பு உயர்நீதிமன்றம் உத்தரவுபடி அகற்றம்
பாலமேடு: அலங்காநல்லுார் ஒன்றியம் பாரைப்பட்டி ஊராட்சி சரந்தாங்கியில் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின்படி ஓடையை ஆக்கிரமித்து அமைத்திருந்த மண் ரோடு அகற்றப்பட்டது. இவ்வூராட்சி ஒத்த மாமரத்து ஓடை வழியாக நரிகுட்டு, வெள்ளை கரடு, கிழுவமலைக்கு மழை நீர் செல்லும். இந்த ஓடையில் இருந்த மா உள்ளிட்ட மரங்களை அகற்றி 2 ஆண்டுகளுக்கு முன் தனியார் 'பிளாட்'களுக்கு செல்ல சாலை அமைத்தனர். இதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காததால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மனுதாரர் அன்பழகன் கூறியதாவது: 300 அடி நீளம், 6 அடி ஆழ ஓடையை மண் கொட்டி மேவி தனியார் பிளாட்டிற்கு மின் இணைப்பு வழங்கினர். கல்லுாத்து ஓடையில் நமக்கு நாமே திட்ட நிதி ரூ.59 லட்சத்தில் பாலம் கட்டினர். இப்பகுதி நான்கு கண்மாய்களுக்கு செல்ல வேண்டிய நீர் ஆக்கிரமிப்பால் குடியிருப்புகளுக்குள் புகுந்தது. சட்டவிரோதமாக ஆளுங்கட்சிக்கு ஆதரவாக அதிகாரிகள் செயல்பட்டனர். மண் ரோட்டை அகற்றி ஓடையை மீட்க உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டது. அதிகாரிகள் அலட்சியமாக செயல்பட்டனர். இதனால் அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இதில் மனுதாரர் ஆக்கிரமிப்புகளை இயந்திரங்கள் மூலம் அகற்றலாம் என நீதிமன்றம் உத்தரவிட்டது. வருவாய்த்துறை,போலீசார் முன்னிலையில் ஓடையை மீட்டுள்ளோம் என்றார்.