கோயிலில் வசதிகள்: உயர்நீதிமன்றத்தில் தகவல்
மதுரை: ஹிந்து தர்ம பரிஷத் மேலாண்மை அறங்காவலர் ரமேஷ், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு: திருப்பரங்குன்றம் பால் சுனை கண்ட சிவபெருமான் கோயிலில் பக்தர்கள் மழைக்காலத்தில் நனையாமல் இருக்க கூரைகள் அமைத்து அடிப்படை வசதிகளை நிறைவேற்றக்கோரி கலெக்டர், சுப்பிரமணியசுவாமி கோயில் செயல் அலுவலருக்கு மனு அனுப்பினேன். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வு விசாரித்தது. கோயில் தரப்பு வழக்கறிஞர் சந்திரசேகர்,'பால் சுனை கண்ட சிவபெருமான் கோயிலில் தற்போது மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளது,' எனக்கூறி போட்டோ ஆதாரங்களை சமர்ப்பித்தார். ஏதேனும் கூடுதல் வசதிகள் செய்ய வேண்டியிருந்தால், தேவை அடிப்படையில் நிறைவேற்றப்படும் என்றார். இந்த உத்தரவாதத்தை பதிவு செய்து வழக்கை நீதிபதிகள் பைசல் செய்தனர்.