உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / குன்றத்தில் திருக்குளம் சீரமைப்பு இறுதி கட்ட பணிகள் சுறுசுறு

குன்றத்தில் திருக்குளம் சீரமைப்பு இறுதி கட்ட பணிகள் சுறுசுறு

திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சொந்தமான லட்சுமி தீர்த்த குளம் (திருக்குளம்) ரூ. 6.50 கோடியில் சீரமைப்பு பணிகள் நடக்கிறது.சுப்பிரமணிய சுவாமி கோயில் வளாகத்திலுள்ள லட்சுமி தீர்த்த குளத்தின் உள்பகுதியில் 4 மூலைகளிலும் இருந்த கருங்கல் சுவர்கள் இடிந்து விழுந்தன. அக்குளத்தை பழமை மாறாமல், ஏற்கனவே இருந்த கருங்கற்களைக் கொண்டு சீரமைப்பு பணிகள் நடக்கிறது. வடக்கு பகுதிகளில் சிமென்ட் கான்கிரீட் சுவர் அமைத்து அதன் உள்பகுதியில் கருங்கல் ஒட்டும் பணி நிறைவடைந்தது. புதிதாக திருக்குளத்தின் உட்பகுதியை சுற்றிலும் 4 அடி உயரத்திற்கு சிமென்ட் துாண்களும், அதன்மேல் பகுதியில் சுதை வேலைகளும், இடைப்பட்ட பகுதிகளில் இரும்பு கேட்களும் அமைக்கப்பட்டு வர்ணங்கள் தீட்டப்பட்டுள்ளது.குளத்தின் மேற்குப் பகுதியில் முன்பு இருந்த மரங்களின் வேர்களால் சுவர்கள் இடிந்து விழுந்தன. அப்பகுதியில் மீண்டும் மரங்கள் வளர்ந்து குளத்திற்கு மீண்டும் சேதம் ஏற்படாத வகையில் குளத்தைச் சுற்றிலும் மேல்பகுதியில் நான்கு மீட்டர் அகலத்திற்கு கருங்கற்கள் பதிக்கப்பட்டுள்ளது. அறங்காவலர் குழுத் தலைவர் சத்யபிரியா கூறுகையில், ''95 சதவீத பணிகள் நிறைவடைந்து விட்டது.திருக்குளம் என்ற பெயருக்கு ஏற்றார் போல் குளத்தை அழகுப்படுத்தும் இறுதிகட்ட பணிகள் நடக்கிறது. கும்பாபிஷேகத்திற்குள் பணிகளைமுடிக்க விரைவுபடுத்தப் பட்டுள்ளது'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ