உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பன்னீர்செல்வம், செங்கோட்டையன், தினகரன் சந்திப்புக்காக நடந்த ஆபரேஷன் பி மீடியேட்டராக செயல்பட்ட ராஜ்யசபா எம்.பி., முன்னாள் எம்.பி.,க்கள்

பன்னீர்செல்வம், செங்கோட்டையன், தினகரன் சந்திப்புக்காக நடந்த ஆபரேஷன் பி மீடியேட்டராக செயல்பட்ட ராஜ்யசபா எம்.பி., முன்னாள் எம்.பி.,க்கள்

மதுரை: 'அ.தி.மு.க.,வை மீட்டெடுப்போம்' என பொதுச்செயலாளர் பழனிசாமிக்கு எதிராக களமிறங்கிய பன்னீர்செல்வம், செங்கோட்டையன், தினகரன் ஆகியோரின் 'தேவர் ஜெயந்திவிழா' சந்திப்பிற்கு 'ஆபரேஷன் பி(பழனிசாமி)' என்ற பெயரில் ராஜ்யசபா எம்.பி., உட்பட முன்னாள் எம்.பி.,க்கள் திரைமறைவில் 'மீடியேட்டராக' செயல்பட்டது தெரிய வந்துள்ளது. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு கட்சியை கைப்பற்றிய பழனிசாமிக்கு எதிராக பன்னீர்செல்வம், செங்கோட்டையன், தினகரன் ஆகியோர் ஒன்றிணைந்து போராட போவதாக பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் அறிவித்தனர். இதற்கு சசிகலாவும் ஆதரவு தெரிவித்தார். இந்நிகழ்வுக்கு முதலில் பிள்ளையர் சுழி போட்டது செங்கோட்டையன்தான். 'பிரிந்தவர்களை ஒன்று சேர்க்க வேண்டும். அப்போதுதான் அ.தி.மு.க., மீண்டும் ஆட்சி அமைக்க முடியும்' என பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக செங்கோட்டையன் கருத்து தெரிவிக்க, கட்சியில் இருந்து ஓரங்கட்டப்பட்டார். குறிப்பிட்ட காலம் வரை பொறுத்திருந்த அவர், ஒருவாரத்திற்கு முன் பன்னீர்செல்வத்திடம் பேச விரும்பினார்.

முன்னாள் எம்.பி.,க்களின் முயற்சி

ஆனால் அவர் மனதில் என்ன இருக்கிறது எனத்தெரியாமல் பேசினால் சரியாக இருக்காது என செங்கோட்டையன் தயங்கினார். இதையறிந்த அவரது ஆதரவாளரான முன்னாள் எம்.பி., சத்யபாமா, 'மதுரை முன்னாள் எம்.பி., கோபாலகிருஷ்ணன் எனக்கு நல்ல நண்பர். அவரும், நானும் ஒரே நேரத்தில் எம்.பி.,யாக இருந்தவர்கள். அவர் பன்னீர்செல்வத்தின் தீவிர விசுவாசி' எனக்கூறினார். அவர் வழியாக கோபாலகிருஷ்ணனிடம் செங்கோட்டையன் பேசினார். அவர் உடனடியாக பன்னீர்செல்வத்தின் கவனத்திற்கு கொண்டு செல்ல, இணைந்து செயல்பட அவர் சம்மதித்தார். போனில் இருவரும் ஆலோசித்தனர். தினகரனும் இணைந்தால் பழனிசாமியை வலுவாக எதிர்க்க முடியும் என முடிவு செய்தனர். தினகரனின் அ.ம.மு.க., மதுரை நிர்வாகியும், முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் மகனுமான டேவிட் அண்ணாதுரையிடம் கோபாலகிருஷ்ணன் மூலம் பேசினர். தினகரனும் பச்சைக்கொடி காட்ட, தேவர் ஜெயந்தியன்று மூவரும் சந்திக்க முடிவானது. ஒருவாரமாக 'ஆபரேஷன் பி' என்ற பெயரில் சந்திப்பதற்கான ஏற்பாடுகளை செய்த கோபாலகிருஷ்ணன், பசும்பொன்னிற்கு மூவரும் வரும்போது பழனிசாமிக்கு கிடைக்கும் வரவேற்பைவிட பிரம்மாண்டமாக கொடுக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜ்யசபா எம்.பி., தர்மரிடம் தெரிவித்தார். தர்மரும் அதற்கான ஏற்பாடுகளை மற்றவர்களுடன் இணைந்து செய்தார்.

சசிகலா வீட்டில் சந்திக்கின்றனர்

பசும்பொன் செல்வதற்காக அக்.29 இரவு செங்கோட்டையனும், பன்னீர்செல்வமும் மதுரை வந்தனர். தனியார் ஓட்டலில் இரவு 11:30 மணிக்கு சந்தித்து பழனிசாமிக்கு எதிரான வியூகங்கள் குறித்து ஆலோசித்தனர். மறுநாள் அவரவர் காரில் பசும்பொன் புறப்பட தயாரான நிலையில், 'இங்கிருந்தே(மதுரை) இணைந்தே செல்வோம்' எனக்கூறி தனது காரில் செங்கோட்டையனை பன்னீர்செல்வம் அழைத்துச்சென்றார். செல்லும் வழியில் நெடுங்குளம் பகுதியில் தினகரனை சந்திக்க முடிவு செய்து அவரது 'லொக்கேஷன்' குறித்து டேவிட் அண்ணாதுரையிடம் அவ்வப்போது கேட்டு தெரிந்து கொண்டனர். சசிகலாவையும் சந்திக்க காத்திருந்த நிலையில் அவரது உதவியாளர் கார்த்திகேயன் முறையாக சசிகலாவின் 'லொக்கேஷன்' குறித்து 'அப்டேட்' செய்யாததால் சந்திக்க முடியவில்லை. பின்னர் பசும்பொன்னில் சசிகலாவை சில நிமிடங்கள் தான் சந்தித்ததால் விரிவாக பேச முடியவில்லை. இதனால் விரைவில் அவரது போயஸ்கார்டன் பங்களாவில் மூவரும் சந்தித்து ஆலோசனை கேட்க உள்ளனர்.

தெரிந்தேதான் சொன்னாரா பழனிசாமி

மதுரையில் நேற்றுமுன்தினம் பிரஸ்மீட் கொடுத்த பழனிசாமி, 'தினகரன் உட்பட மூவரும் தி.மு.க.,வின் 'பி' டீமாக உள்ளனர். துரோகிகள் அடையாளம் காணப்பட்டு விட்டார்கள்' என்றார். முதன்முறையாக இவர்களை 'பி' டீம் எனக்கூறியதற்கு ஒரு வாரமாக திரைமறைவில் தனக்கு எதிராக நடந்த 'ஆபரேஷன் பி' தான் காரணம். எதிர்முகாமில் நடப்பவற்றை சிலர் மூலம் அறிந்துதான் 'தி.மு.க.,வின் 'பி' டீம்' என பழனிசாமி கூறியுள்ளார் என்கின்றனர் அ.தி.மு.க.,வினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை