உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மதுரையில் 6 சிலைகள் இடமாற்றம் உயர்நீதிமன்றத்தில் தகவல்

மதுரையில் 6 சிலைகள் இடமாற்றம் உயர்நீதிமன்றத்தில் தகவல்

மதுரை: மதுரை கோரிப்பாளையத்தில் மேம்பாலம், சாலை விரிவாக்க பணி நடைபெறுவதால் அப்பகுதியிலுள்ள 6 சிலைகள் வெவ்வேறு இடங்களில் மாற்றியமைக்கப்படும் என மாநகராட்சி தரப்பில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தெரிவிக்கப்பட்டது. மதுரை கனகவேல் பாண்டியன் தாக்கல் செய்த பொதுநல மனு: கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை இந்திய சுதந்திரத்திற்கு உழைத்தவர். அவரது தியாகம், தமிழ்த் தொண்டினை போற்றும் வகையில் 1981 ல் மதுரை தல்லாகுளம் பகுதியில் தமிழக அரசால் சிலை அமைக்கப்பட்டது. மதுரையில் வேறு எங்கும் அவரது சிலை இல்லை. அரசு தரப்பில் சாலை விரிவாக்கம் என்ற பெயரில் சிலையை அகற்ற முயற்சித்தனர். மக்கள், 'சிலையை அருகிலேயே நிறுவ வேண்டும்,' என அதிகாரிகளிடம் வலியுறுத்தினர். அனுமதி பெற்று அவ்வாறு செய்வதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். அதை மீறும் வகையில் சிலையை அகற்ற முயற்சி நடக்கிறது. அகற்ற தடை விதிக்க வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். நீதிபதிகள் அனிதா சுமந்த், பி.டி.ஆஷா அமர்வு விசாரித்தது. மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் அஸ்வின் ராஜசிம்மன் ஆஜரானார். மாநகராட்சி தரப்பு வழக்கறிஞர் கண்ணன்: வாரணாசி-கன்னியாகுமரி சாலையின் கோரிப்பாளையம் சந்திப்பில் மேம்பாலம் அமைத்தல் மற்றும் சாலையை அகலப்படுத்தும் பணி நடக்கிறது. இச்சாலையின் தல்லாகுளம் பெருமாள் கோயில் பகுதியிலுள்ள உ.வே.சுவாமிநாத அய்யர் சிலை, கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின் சிலை உலகத் தமிழ்ச்சங்கம் அருகே நீச்சல்குளம் பகுதியிலுள்ள மாநகராட்சி படிப்பகத்திற்கு மாற்றப்படும். தமுக்கம் தமிழன்னை சிலை, சங்கரதாஸ் சுவாமிகள் சிலை உலகத் தமிழ்ச் சங்கத்திற்கும், தியாகிகள் நினைவுச் சின்னம் ஸ்துாபி மாநகராட்சி அலுவலக வளாகம், நேரு சிலை மாவட்ட நீதிமன்றம் எதிரே முக்கோண வடிவ பூங்காவிற்கும் இடமாற்றம் செய்யப்படும் எனக்கூறி ஆவணம் தாக்கல் செய்தார். நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: எவ்வளவு காலவரம்பிற்குள் சிலைகள் இடமாற்றம் செய்யப்படும் என கலெக்டர் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். அதுவரை சிலைகளுக்கு இடையூறு ஏற்படுத்தக்கூடாது. விசாரணை செப்.23க்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி