நுழைவு கட்டணம் வசூலிக்க தடை கோரிய வழக்கு தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
மதுரை: திருநெல்வேலி மாவட்டம் களக்காடு-முண்டந்துறை புலிகள் சரணாலய பகுதியிலுள்ள கோயில்களுக்கு செல்ல நுழைவு கட்டணம் வசூலிக்க தடை கோரிய வழக்கில் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை. திருநெல்வேலி மாவட்டம் ஜமீன் சிங்கம்பட்டி மாரியப்பன் தாக்கல் செய்த பொது நல மனு: களக்காடு-முண்டந்துறை புலிகள் சரணாலய பகுதியில் பழமையான பொன்புதுக்காவுடையார்-பீமவுடையார் சாஸ்தா கோயில், வனபேச்சியம்மன் கோயில், சங்கிலி பூதத்தார் கோயில் உள்ளன. இங்கு பக்தர்களை செல்ல விடாமல் வனத்துறை சோதனைச்சாவடியில் தடுக்கின்றனர். நுழைவு கட்டணம் செலுத்த வேண்டும் என்கின்றனர். அகஸ்தியர் அருவி, கல்யாண தீர்த்தத்திற்கு உள்ளூரை சேர்ந்தவர்கள் வாகனத்தில் சென்று வர வனத்துறை கட்டணம் வசூலிக்கக் கூடாது என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. 3 கோயில்களிலும் தினசரி வழிபாடு செய்ய, நேர்த்திக்கடன், கும்பாபிஷேகம், பங்குனி உத்திரம், ஆவணி கோயில் கொடையின் போது உள்ளூரைச் சேர்ந்த பக்தர்களிடம் மணிமுத்தாறு வனத்துறை சோதனை சாவடியில் நுழைவு கட்டணம் வசூலிக்க தடை விதிக்க வேண்டும். வாகனங்களை அனுமதிக்க வனத்துறைக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். நீதிபதிகள் அனிதா சுமந்த், சி.குமரப்பன் அமர்வு விசாரித்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் பினேகாஸ் ஆஜரானார். நீதிபதிகள் தமிழக சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை முதன்மை செயலர், முதன்மை தலைமை வனப்பாதுகாவலர், சரணாலய கள இயக்குனர் பதில் மனு தாக்கல் செய்ய நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு டிச., 10 க்கு ஒத்திவைத்தனர்.