டாக்டருக்கு கத்திக்குத்து பற்றி அவதுாறு டிவிகள் மீது நடவடிக்கை கோரி வழக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
மதுரை : சென்னை கிண்டி அரசு மருத்துவமனை டாக்டர் மீது கத்திக்குத்து நடந்தது குறித்து அவதுாறு கருத்துக்களை வெளியிடும் சில 'டிவி' சேனல்கள், சமூக வலைத்தளங்கள் மீது நடவடிக்கை கோரிய வழக்கில், இடைநிலை குறைதீர்ப்பு குழுவிடம் புகார் அளிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.தமிழக அரசு டாக்டர்கள் சங்கம் தலைவர் செந்தில் தாக்கல் செய்த மனு:புற்றுநோய் பாதித்த தனது தாய்க்கு சரியாக சிகிச்சை அளிக்கவில்லை எனக்கூறி விக்னேஷ் என்பவர் 2024 நவ.14 ல் கிண்டி அரசு மருத்துவமனையில் டாக்டர் பாலாஜியை கத்தியால் குத்தினார். டாக்டர் காயமடைந்தார். இதை கண்டித்தும், தங்களுக்கு பாதுகாப்பு அளிக்க வலியுறுத்தியும் டாக்டர்கள் போராட்டம் நடத்தினர்.விக்னேஷின் தாய், உறவினர்களின் கருத்துக்களை சில தனியார் 'டிவி' சேனல்கள், சமூக வலைத்தளங்கள் ஒளிபரப்பின. அதில் டாக்டர் பாலாஜிக்கு எதிராக அவதுாறான கருத்துக்கள் உள்ளன.உண்மைகளை சரிபார்க்காமல் வெளியான இப்பேட்டிகள் பாலாஜி மற்றும் ஒட்டுமொத்த டாக்டர் சமூகத்தின் மீதான நற்பெயருக்கு பாதிப்பு ஏற்படுத்தியுள்ளது. மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை செயலருக்கு புகார் அனுப்பினேன். சம்பந்தப்பட்ட 'டிவி' சேனல்கள், சமூக வலைத்தளங்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். டாக்டர் பாலாஜி மற்றும் இதர மருத்துவ நிபுணர்களை குறிவைத்து அவதுாறான கருத்துக்கள் அல்லது பேட்டிகளை ஒளிபரப்ப தடை விதிக்க வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதி ஜி.கே.இளந்திரையன்: தகவல் தொழில்நுட்பச் சட்ட விதியின்படி இடைநிலை குறைதீர்ப்பு குழுவிடம் மனுதாரர் புகார் அளிக்க வேண்டும். அதை குழு பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும். மனு பைசல் செய்யப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டார்.