சரஸ்வதி மகால் நுாலக ஓலைச்சுவடி டிஜிட்டல் மயமாக்க வழக்கு; உயர்நீதிமன்றம் உத்தரவு
மதுரை : தஞ்சாவூர் சரஸ்வதி மகால் நுாலக ஓலைச்சுவடிகளை டிஜிட்டல்மயமாக்க தாக்கலான வழக்கில்,'மாநில அளவில் சுவடி குழுமம் அமைக்கப்பட்டுள்ளது' என அரசு தரப்பு தெரிவித்தது. இதில் குறைபாடு இருந்தால் சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் புகார் அளிக்கலாம் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. ராமநாதபுரம் மாவட்டம் மோர்ப்பண்ணை திருமுருகன் தாக்கல் செய்த பொதுநல மனு: தஞ்சாவூர் சரஸ்வதி மகால் நுாலகம் ஆசியாவிலேயே மிகப்பழமையானது. இங்கு அரிய பல புத்தகங்கள், பனை ஓலைச்சுவடிகள் உள்ளன. வரலாற்று ஆய்வாளர்கள், ஆய்வு மாணவர்களுக்கு அறிவுக்களஞ்சியமாக திகழ்கிறது. ஓலைச்சுவடிகள் சேதமடைய வாய்ப்புள்ளது. குஜராத் பல்கலையிலுள்ள ஓலைச்சுவடிகள் டிஜிட்டல்மயமாக்கப்பட்டது. அதுபோல் சரஸ்வதி மகால் நுாலகத்திலுள்ள பழமையான ஓலைச்சுவடிகளை டிஜிட்டல்மயமாக்க வேண்டும். அவற்றை மக்கள் இலவசமாக பார்வையிட ஏற்பாடு செய்ய வலியுறுத்தி மத்திய கலாசாரத்துறை முதன்மை செயலர், தமிழக பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலர், நுாலகத்துறை இயக்குனருக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், எஸ்.ஸ்ரீமதி அமர்வு விசாரித்தது. மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் அழகுமணி ஆஜரானார். அரசு பிளீடர் திலக்குமார், 'ஓலைச்சுவடிகளை பாதுகாத்து ஆவணப்படுத்த மாநில அளவில் சுவடி குழுமம் அமைத்து 2019 ல் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது' என்றார். நீதிபதிகள், 'இதை செயல்படுத்துவதில் குறைபாடு இருந்தால், சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் புகார் அளிக்க மனுதாரருக்கு உரிமை உண்டு. வழக்கு பைசல் செய்யப்படுகிறது' என உத்தரவிட்டனர்.