ஒத்தக்கடையில் ஆக்கிரமிப்பு அகற்ற தவறும் அதிகாரிகள் சஸ்பெண்ட் உயர்நீதிமன்றம் எச்சரிக்கை
மதுரை: மதுரை ஒத்தக்கடையில் ஆக்கிரமிப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க தவறும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை 'சஸ்பெண்ட்' செய்ய உத்தரவு பிறப்பிக்க நேரிடும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை எச்சரித்தது. மதுரை வீரமணிகண்டன் தாக்கல் செய்த பொதுநல மனு: மதுரை- - மேலுார் ரோடு ஒத்தக்கடை நடைபாதைகளில் ஆக்கிரமிப்புகள் உள்ளன. மக்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. அகற்ற வேண்டும். குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமிப்பு ஏற்படாதவாறு கண்காணிப்பு கேமராக்களை நிறுவி கண்காணிக்க கலெக்டர், மாநில நெடுஞ்சாலைத்துறை மதுரை கோட்ட உதவி செயற்பொறியாளர் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். சேலம் ராதாகிருஷ்ணன்,'ஒத்தக்கடையில் போக்குவரத்திற்கு இடையூறாக தடுப்புகளை கடை முன் வைத்துள்ளனர். அகற்ற உத்தரவிட வேண்டும்,' என மனு செய்தார். நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஜி.அருள்முருகன் அமர்வு பிறப்பித்த உத்தரவு: ஒத்தக்கடையில் சாலை, நடைபாதைகளில் ஆக்கிரமிப்பு உள்ளதை நாங்கள் பார்த்திருக்கிறோம். ஆக்கிரமிப்புகளை மாவட்ட நிர்வாகம், மாநில நெடுஞ்சாலைத்துறை, போலீசார், ஊராட்சி நிர்வாகம் ஒருங்கிணைந்து அகற்ற வேண்டும். மீண்டும் ஆக்கிரமிப்பு நிகழாமல் தொடர்ந்து கண்காணித்து தடுக்க வேண்டும். ஆக்கிரமிப்பாளர்கள் மீது வழக்கு பதிய வேண்டும். ஆக்கிரமிப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தவறும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை 'சஸ்பெண்ட்' செய்ய உத்தரவு பிறப்பிக்க நேரிடும். ஆக்கிரமிப்புகளை அகற்ற மேற்கொண்ட நடவடிக்கை குறித்து அரசு தரப்பில் ஆக.20ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டனர்.