ஹோட்டல் ஊழியர்களுக்கு உதை 100ஐ அழைத்தும் வராத அவலம்
மதுரை:'ஹோட்டலில் கலாட்டா நடப்பது குறித்து '100'க்கு புகார் செய்தும் சம்பவ இடத்திற்கு போலீஸ் வரவில்லை' என, பாதிக்கப்பட்ட பெண் ஊழியர்கள் புகார் தெரிவித்தனர். மதுரை, நாகமலை புதுக்கோட்டையை சேர்ந்தவர் நர்மதா, 40. இவர் இப்பகுதியில் ஹோட்டல் நடத்தி வருகிறார். மூன்று பெண்கள் பணியாற்றுகின்றனர். நேற்று முன்தினம் இவரது ஹோட்டலுக்கு வந்த இருவர், நர்மதா மற்றும் இரு பெண் ஊழியர்களை திடீரென தாக்கினர். அப்போது அங்கிருந்த பத்தாம் வகுப்பு மாணவரான நர்மதாவின் மகன் வினோத் தடுக்க, அவரையும் கடுமையாக தாக்கினர். உடனடியாக '100'க்கு தகவல் தெரிவித்தும் போலீசார் வர தாமதமானதாக, நாகமலை புதுக்கோட்டை போலீஸ் ஸ்டேஷனில் நேற்று புகார் அளித்த நர்மதா குற்றஞ்சாட்டினார்.