காதல் திருமணத்தால் தகராறு வீட்டிற்கு தீ; நகை, பணம் கருகின
திருமங்கலம்: திருமங்கலம் செல்வம்- பத்மாவதி தம்பதி மகன் அஸ்வந்த் 25. இப்பகுதி பழனியாபுரம் கவிராஜன் மகள் அனிதா 24. ஒரே சமூகத்தை சேர்ந்த இருவரும் 5 மாதங்களுக்கு முன் காதல் திருமணம் செய்து கொண்டனர். பெண் வீட்டாரின் எதிர்ப்பால் இரு வீட்டாருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. நேற்று முன்தினம் செல்வம் குடும்பத்தினர் வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியபோது செல்வத்துக்கும் கவிராஜனுக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் செல்வத்திற்கும் அவரது பேத்திக்கும் காயம் ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு செல்வத்தின் மகள் பிரியதர்ஷினி வீட்டிற்கு மர்ம நபர் வீட்டின் ஜன்னல் வழியாக பெட்ரோலை ஊற்றி தீ வைத்தார். வீடு தீப்பிடித்ததில் 35 பவுன் நகை, ரூ.2 லட்சம் கருகியதாக புகார் தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக கவிராஜன், மகன் கவுசிக் 24, ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.