உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கொள்ளிடத்தில் தண்ணீர் எடுக்க தடை கோரி வழக்கு; உயர்நீதிமன்றம் தள்ளுபடி

கொள்ளிடத்தில் தண்ணீர் எடுக்க தடை கோரி வழக்கு; உயர்நீதிமன்றம் தள்ளுபடி

மதுரை : குடிநீர் திட்டத்திற்காக திருச்சி மாவட்டம் அன்பில் கொள்ளிடம் ஆற்றில் ஆழ்துளை கிணறு அமைக்க தடை கோரிய வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது.கொள்ளிடம் ஆறு பாதுகாப்பு நலச் சங்க துணைச் செயலாளர் கஜேந்திரன் தாக்கல் செய்த பொதுநல மனு:திருச்சி, தஞ்சை மாவட்டங்களில் கொள்ளிடம் ஆற்றில் 30 இடங்களில் குடிநீரேற்று நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அன்பில் மற்றும் அருகிலுள்ள 20 கிராமங்கள் விவசாயத்திற்கு கொள்ளிடம் ஆற்றுநீரை நம்பியுள்ளன. ஆற்றில் சட்டவிரோதமாக மணல் அள்ளப்பட்டதால் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஸ்ரீரங்கம், வாண்டையார் இருப்பு குடிநீரேற்று நிலையம் அருகே இருந்த பாலம் பழுதடைந்து கீழே விழுந்தது. மணல் திருட்டு, அளவிற்கு அதிகமாக தண்ணீரை உறிஞ்சி எடுத்ததால் இப்பாதிப்பு ஏற்பட்டது.தற்போது லால்குடி, புள்ளம்பாடி பகுதி புதிய குடிநீர் திட்டத்திற்காக தமிழக அரசு சார்பில் அன்பில் கொள்ளிடம் ஆற்றுப் படுகையில் ஆழ்துளை கிணறு அமைக்க உள்ளனர். எதிராக விவசாயிகள் போராடினர். சமாதான பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது.குடிநீர் திட்டப் பணிக்கு ஆழ்துளை கிணறு அமைக்க தடை விதிக்க வேண்டும். இவ்வாறு கஜேந்திரன் குறிப்பிட்டார்.இதுபோல் ஆறுமுகம் என்பவர் மற்றொரு மனு தாக்கல் செய்தார்.நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.புகழேந்தி அமர்வு: அறிவியல்பூர்வமாக குடிநீர் வடிகால் வாரியம் ஆய்வு செய்தபின் கீழ அன்பில் கிராமத்தில் ஆழ்துளை கிணறு அமைக்க முடிவு செய்யப்பட்டது. அப்பகுதியில் எதிர்காலத்தில் நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கப்படும்பட்சத்தில் இந்நீதிமன்றத்தை அணுகலாம். மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன. இவ்வாறு உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை