| ADDED : ஜூலை 28, 2011 03:40 AM
மதுரை : வழக்குகளை தாக்கல் செய்யும் போது, கூடுதல் ஆவணங்களை ஆங்கிலத்தில்
மொழி பெயர்க்கும் தலைமை நீதிபதி யூசுப் இக்பாலின் உத்தரவை திரும்ப பெற
வலியுறுத்தி, மதுரை ஐகோர்ட் கிளையில் வக்கீல்கள் காலவரையற்ற புறக்கணிப்பை
துவக்கினர்.மதுரை ஐகோர்ட் கிளையில் வழக்குகளை தாக்கல் செய்யும்போது, அதற்கு
ஆதாரமாக ஆவணங்களை இணைத்து வழங்குவர். அந்த ஆவணங்களில் சில தமிழில்
இருக்கும். அவற்றை எல்லாம் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்க தலைமை நீதிபதி
உத்தரவிட்டார். இதனால் தேவையில்லாத கால விரயம், செலவு ஏற்படும் என
வக்கீல்கள் தெரிவிக்கின்றனர். தலைமை நீதிபதியின் உத்தரவை திரும்ப பெற
வேண்டும் என வக்கீல்கள் நேற்று புறக்கணிப்பில் ஈடுபட்டனர். இதுகுறித்து
வக்கீல் சங்கங்களின் நிர்வாகிகள் நீதிபதி பி.ஜோதிமணியை சந்தித்து
முறையிட்டனர்.பின், வக்கீல் சங்கங்களின் அவசர கூட்டம் நடந்தது. நிர்வாகிகள்
வெள்ளைச்சாமி, ராமசாமி, திருநாவுக்கரசு, ஜெயசீலன், ஆனந்தவள்ளி,
அருள்வடிவேல்சேகர், லஜபதிராய், அழகுமணி, வாஞ்சிநாதன், வாமனன் பேசினர்.
ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கும் உத்தரவை திரும்ப பெறும் வரை கோர்ட்
புறக்கணிப்பு தொடரும். நீதிபதிகளின் படங்களை ஐகோர்ட் கிளை நீதி தேவதை
அறையில் வைக்க கூடாது. ஐகோர்ட் கிளையில் தமிழை அலுவல் மொழியாக்கும் சட்டசபை
தீர்மானத்திற்கு ஜனாதிபதி ஒப்புதலை அரசு பெற வேண்டும் போன்ற தீர்மானங்கள்
நிறைவேற்றப்பட்டன.