உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மாணவர்களை "சிறந்த மனிதர்களாக ஆசிரியர்கள் உருவாக்க வேண்டும்

மாணவர்களை "சிறந்த மனிதர்களாக ஆசிரியர்கள் உருவாக்க வேண்டும்

குன்றம்:''மாணவர்களை ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., டாக்டர், பொறியாளர்களாக ஆக்குவது மட்டுமின்றி, சிறந்த மனிதர்களாக ஆசிரியர்கள் உருவாக்க வேண்டும்,'' என மதுரை கலெக்டர் சகாயம் அறிவுரை வழங்கினார். தியாகராஜர் இன்ஜி., கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான 'தேடல் 2011' நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: மாணவர்களின் திட்டம், லட்சியம், இலக்கு ஆகியவற்றை ஆசிரியர்கள் கண்டுபிடித்து ஊக்கம் அளிக்க வேண்டும். நாமக்கலில் நான் பணியாற்றிய போது, வெள்ளத்தூரை சேர்ந்த கதிர்வேல் என்ற மாணவர் 10ம் வகுப்பில் 491 மதிப்பெண் எடுத்ததற்காக, அரசின் உதவித் தொகையாக 28 ஆயிரம் ரூபாய் வழங்கினேன். அம்மாணவர் பணத்தை திருப்பி கொடுத்துவிட்டு, 'தனியார் பள்ளியில் படிக்க மாட்டேன். அரசு பள்ளியில்தான் படிப்பேன்' என்றார். இந்த ஆண்டு அவர் பிளஸ் 2 தேர்வில் 1165 மதிப்பெண்கள் பெற்று அரசு ஒதுக்கீட்டில் சென்னை மருத்துவ கல்லூரியில் சேர்ந்துள்ளார். அவர் மாற்றுத் திறனாளி. மாணவர்களை ஆசிரியர்கள் நம்ப வேண்டும். ஏன், எதற்கு, எப்படி என கேள்விகளை மாணவர்கள் கேட்க வேண்டும். அதுதான் உங்களை வலுப்படுத்தும் என்றார். தாளாளர் கருமுத்து கண்ணன் பேசுகையில், ''பொறியியல் துறை குறித்து பள்ளி மாணவர்கள் அறிந்து கொள்வதற்காக இந்நிகழ்ச்சி ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது'' என்றார். கழிவுப் பொருட்களில் கலைநயம், ஓவியம், கட்டுரை, வினாடிவினா, நடனம், கவிதை உட்பட பல்வேறு போட்டிகளில், மதுரை மாவட்டத்தை சேர்ந்த 4,500 மாணவர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி