| ADDED : ஆக 07, 2011 02:51 AM
மதுரை:மதுரையில் மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் பிறந்த நாளை கொண்டாட
ரூ.50 ஆயிரம் தர மறுத்த, தனியார் வங்கி ஊழியர் மோகன்தாஸ் காந்தியை,
தாக்கியதாக தி.மு.க., மூன்றாம் பகுதி செயலாளர் ஒச்சுபாலு நேற்று கைது
செய்யப்பட்டார்.மதுரை கரிமேட்டை சேர்ந்த மோகன்தாஸ்காந்தி (34). இவர்,
தனியார் வங்கியின் வசூல் பிரிவு ஊழியர். இவரிடம், மு.க.அழகிரியின் பிறந்த
நாளை கொண்டாட ஒச்சுபாலு, அவரது கூட்டாளிகள் பத்து பேர் ரூ.50 ஆயிரம்
கேட்டனர். அவர் தர மறுத்தார். 2010 ஜன.,22ல் மோகன்தாஸ்காந்தியை
பொன்னகரத்தில் உள்ள ஒச்சுப்பாலுவின் இடத்திற்கு அழைத்து சென்று
தாக்கியுள்ளனர்.மோகன்தாஸ்காந்தி கொடுத்த புகார்படி ஒச்சுபாலுவை தவிர்த்து
சேட்சிவா, கார்த்திக், சங்கையா (எ) பிரபாகரன், விவேக், சிங்கிசரவணன்,
விஜய், தணியமலை, காந்தி செல்லப்பாண்டி, குட்டி ஆரோக்கியம், அழகுராஜா மீது
கரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இவர்கள் கோர்ட்டில் முன்ஜாமின்
பெற்றனர். ஒச்சுபாலு மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்ய கோரி, ஐகோர்ட்
கிளையில் மோகன்தாஸ்காந்தி மனு செய்தார். ஐகோர்ட் கிளை உத்தரவுப்படி,
ஒச்சுபாலு மீது கரிமேடு போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்தனர்.
இவ்வழக்கில் நேற்று மாலை ஒச்சுபாலுவை கைது செய்தனர்.