| ADDED : ஆக 22, 2011 02:27 AM
மதுரை : மதுரை தல்லாகுளத்தில் குறுகிய சந்தில் செயல்படும் ரயில்வே
முன்பதிவு மையத்தை புதிய கட்டடத்திற்கு மாற்ற நிர்வாகம் நடவடிக்கை எடுக்க
வேண்டும்.மதுரையில் ரயில்வே ஸ்டேஷன் கிழக்கு மற்றும் மேற்கு நுழைவு வாயில்,
தல்லாகுளம், திருநகர் மற்றும் ஐகோர்ட் கிளையில் முன்பதிவு மையங்கள்
செயல்படுகின்றன. தல்லாகுளம் மையம், தபால் அலுவலக கட்டடத்தில் குறுகிய
சந்திற்குள் செயல்படுகிறது. போதிய இடவசதியும் இல்லை. நகரின் வட பகுதியை
சேர்ந்தவர்கள், இங்கு தான் முன்பதிவு செய்கின்றனர். இதனால் காலை முதல் இரவு
வரை படுபிசியாக இருக்கும். முன்பதிவு செய்ய வருவோர், வாகனங்களை நரிமேடு
செல்லும் ரோட்டில் நிறுத்துவதால், நெரிசல் ஏற்படுகிறது. இந்த மையத்தை வேறு
கட்டடத்திற்கு மாற்ற வேண்டும் என பயணிகள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து
வருகின்றனர். ஏற்கனவே முன்பதிவு மையத்திற்கு இடம் ஒதுக்கி கொடுக்க வேண்டும்
என ரயில்வே நிர்வாகம், மாநகராட்சி நிர்வாகத்திடம் கேட்டது. மாநகராட்சியும்
தல்லாகுளம் அருகே இடத்தை ஒதுக்கி கொடுக்க முன்வந்தது. இதுகுறித்து
தீர்மானமும் நிறைவேற்றியது. இடத்தை கேட்டு பெற ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை
எடுக்கவில்லை. புதிய கட்டடத்திற்கு முன்பதிவு மையம் மாறுவது
தள்ளிப்போகிறது.ரயில்வே கோட்ட வர்த்தக அதிகாரி கூறுகையில், ''தல்லாகுளம்
முன்பதிவு மையத்திற்கு இடம் ஒதுக்கும்படி மாநகராட்சி நிர்வாகத்துடன் பேசி
வருகிறோம். விரைவில் இடம் பெறப்படும்,'' என்றார்