| ADDED : ஜூலை 27, 2011 05:25 AM
மதுரை : நெல்பேட்டை ஆடுவதைக்கூடத்தை மீண்டும் செயல்படுத்த சாதகமான சூழல்
ஏற்பட்டுள்ளது. முன்னாள் கவுன்சிலர் அப்துல்காதர், ஐகோர்ட்டில் தொடர்ந்த
வழக்கில், நெல்பேட்டை ஆடுவதை கூடத்திற்கு மாநகராட்சி அதிகாரிகள் 'சீல்'
வைத்தனர். 'அனுப்பானடி நவீன ஆடுவதை கூடத்தை பயன்படுத்த,'
அறிவுறுத்தப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த வியாபாரிகள், கடையடைப்பில்
ஈடுபட்டனர். இறைச்சி வியாபாரிகள் சார்பில் தொடரப்பட்ட மற்றொரு வழக்கில்,
'அவர்களது கோரிக்கையை பரிசீலிக்குமாறு,' மாநகராட்சி அதிகாரிகளுக்கு ஐகோர்ட்
உத்தரவிடப்பட்டது. இதற்காக ஐந்து நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. 'பாதாள
சாக்கடை இணைப்பின் நிலை, உட்புற கழிப்பறை நிலை, சுற்றுச்சுவர் பாதுகாப்பு,
பொதுமக்களுக்கு தொல்லையில்லாத வகையில் போலீஸ் பாதுகாப்பு, வதைக்கு பின்
சுத்தம் செய்யும் உபகரணங்கள் இருப்பு,' குறித்து, ஆய்வு மேற்கொள்ள
வலியுறுத்த பட்டது. இதைத்தொடர்ந்து, முதன்மை நகர்நல அலுவலர் சுப்பிரமணியன்
தலைமையிலான சுகாதார அதிகாரிகள் நெல்பேட்டை ஆடுவதை கூடத்தில் நேரடி ஆய்வு
நடத்தினர். 'பாதாள சாக்கடை இணைப்பு முழுமைபெறாத நிலையில், அனுப்பானடி
கால்வாயில் கழிவுகள் செல்கின்றன. உட்புற கழிப்பறை சேதமாக உள்ளது. பின்புற
சுற்றுச்சுவர் இடிந்திருப்பது,' தெரியவந்தது. அவற்றை சரிசெய்யும்
நடவடிக்கைக்கு மாநகராட்சி நிர்வாகம் முன்வந்துள்ளது. இதைத்தொடர்ந்து,
நெல்பேட்டை ஆடுவதை கூடம் மீண்டும் செயல்பட வாய்ப்புள்ளது.நகர்நல அலுவலர் சுப்பிரமணியன் கூறியதாவது: நிபந்தனைகளை நிறைவேற்றும்
நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். கூடுதல் சுகாதாரப்பணியாளர்கள், தினசரி
போலீஸ் பாதுகாப்பு, ஆடுவதைக்கான நவீன உபகரணங்கள் வாங்க முடிவு
செய்யப்பட்டுள்ளது, என்றார்.