உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மருத்துவக்கழிவு மேலாண்மை வசதி வழக்கு; பதில் கோரும் உயர்நீதிமன்றம்

மருத்துவக்கழிவு மேலாண்மை வசதி வழக்கு; பதில் கோரும் உயர்நீதிமன்றம்

மதுரை : தமிழகத்தில் மாவட்டந்தோறும் மருத்துவக் கழிவு மேலாண்மைக்குரிய வசதிகளை ஏற்படுத்த தாக்கலான வழக்கில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய உத்தர விட்டது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை. மதுரை வெங்கடேஷ் தாக்கல் செய்த பொதுநல மனு: மருத்துவக் (பயோமெடிக்கல்) கழிவு மேலாண்மை விதிமுறைகளின்படி, அக்கழிவுகளை 48 மணி நேரத்திற்குள் அறிவியல் பூர்வமாக கையாள வேண்டும். மாறாக, சில இடங்களில் வீடுகளில் சேகரிக்கப்படும் குப்பைகளுடன் கலக்கப்படுகிறது. அவற்றை பாதுகாப்பற்ற முறையில் எரிக்கும் போது எதிர்மறையான விளைவுகள் ஏற்படுகிறது. விதிகள்படி ஒவ்வொரு மாவட்டத்திலும் மருத்துவக் கழிவு மேலாண்மை மையம் நிறுவ வேண்டும். அம்மாவட்ட எல்லைக்குள் சேகரிக்கப்படும் மருத்துவக் கழிவுகளை கையாள வேண்டும். தற்போது 5 முதல் 6 மாவட்டங்களை சேர்த்து கையாளப்படுகிறது. இதனால் கழிவுகள் தேங்குகின்றன. விதிகளுக்கு புறம்பாக அக்கழிவுகளை கையாள்வதால் சுற்றுச்சூழலுக்கு அச்சுறுத்தல் ஏற்படுகிறது. மருத்துவமனைகளில் பயன்படுத்தப்படும் படுக்கை விரிப்பு உள்ளிட்ட அழுக்கு துணிகளை நீர்நிலைகளில் சலவை செய்கின்றனர். நீர் மாசுபடுகிறது. நோய்கள் பரவுகிறது. மாவட்டந்தோறும் மருத்துவக் கழிவு மேலாண்மைக்குரிய வசதிகளை ஏற்படுத்தக் கோரி தமிழக சுகாதாரத்துறை முதன்மை செயலருக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி ஆஜரானார். நீதிபதிகள் அனிதா சுமந்த், சி. குமரப்பன் அமர்வு தமிழக சுகாதாரத்துறை முதன்மை செயலர், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை கூடுதல் தலைமைச் செயலர், மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நவ., 6ல் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ