மரணத்தில் மர்மம்: மறு பிரேத பரிசோதனை உயர்நீதிமன்றம் உத்தரவு
மதுரை: மதுரை மாவட்டம் கள்ளிக்குடி அருகே கண்மாயில் பிணமாக மிதந்தவரின் உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.கள்ளிக்குடி அருகே வேப்பங்குளம் லிங்கசாமி தாக்கல் செய்த மனு:எனது மகன் காளையன் 23. மெக்கானிக் பட்டயப் படிப்பு முடித்துள்ளார். ஒரு பெண்ணை காதலித்தார். இது அவரது உறவினர்களுக்கு பிடிக்கவில்லை. கண்மாய்க்கரை வழியாக மகன் ஜன.8 ல் சென்றபோது தாக்கினர். பயந்து எங்கள் வீட்டில் ஆடு, மாடுகளை அடைக்கும் கொட்டகைக்குள் நுழைந்தபோது தாக்கினர். இது அருகிலுள்ள வீட்டின் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.மகனை ஜன.13 முதல் காணவில்லை. கள்ளிக்குடி போலீசார் வழக்கு பதிந்தனர். ஜன.15 ல் கண்மாயில் பிணமாக மிதந்தார். எங்களிடம் அனுமதி பெறாமல் அவசரகதியில் மதுரை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை நடந்தது. மகனை சிலர் கொலை செய்துள்ளனர்.மூத்த தடயவியல் பேராசிரியர் தலைமையில் சிறப்புக்குழு மறு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும். அதை வீடியோ பதிவு செய்ய உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதி பி.தனபால்: உடல் அழுகிய நிலையில் உள்ளதாக அரசு தரப்பு தெரிவித்தது. மறு பிரேத பரிசோதனை செய்ய வாய்ப்பிருக்கும்பட்சத்தில் அதை மேற்கொள்வது குறித்து டீன் முடிவு செய்ய வேண்டும்.ஒருவாரத்தில் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும். அதை வீடியோ பதிவு செய்ய வேண்டும். முடிந்ததும் உடலை மனுதாரர் பெற்றுக் கொள்ள வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டார்.