உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பெண்கள் பள்ளி வளாகத்திலிருந்து கல்வி அலுவலகத்தை காலி செய்ய உத்தரவு

பெண்கள் பள்ளி வளாகத்திலிருந்து கல்வி அலுவலகத்தை காலி செய்ய உத்தரவு

மதுரை : நாகர்கோவில் எஸ்.எல்.பி., பெண்கள் பள்ளி வளாகத்திலிருந்து கல்வித்துறையின் அலுவலகங்களை காலி செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. கன்னியாகுமரி மாவட்டம் மருங்கூர் வேல்முருகன் தாக்கல் செய்த பொதுநல மனு: நாகர்கோவில் எஸ்.எல்.பி., பெண்கள் உயர்நிலை பள்ளி, திருவிதாங்கூர் சமஸ்தானத்தால் துவங்கப்பட்டது. இப்பள்ளி வளாகத்தில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகம், மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகம் செயல்படுகின்றன. தற்போது குறைந்த பரப்பளவில் பள்ளி செயல்படுகிறது. மைதானத்தில் அரசு குழந்தைகள் காப்பகம், மாவட்ட குழந்தைகள் நலத்துறை அலுவலகம் அமைக்க முயற்சிக்கப் படுகிறது. இதற்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். நீதிபதிகள் அனிதா சுமந்த், சி.குமரப்பன் அமர்வு விசாரித்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் சேவியர் ரஜினி ஆஜரானார். நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: பள்ளி வளாகத்தில் கல்வித்துறை அலுவலகம் எதுவும் செயல்படக்கூடாது என ஏற்கனவே தமிழக அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. இதற்கு முரணாக முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகம், மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகம் செயல்படுகிறது. இவற்றை 6 வாரங்களில் காலி செய்ய வேண்டும். இதனால் ஏற்படும் காலி இடத்தில் குழந்தைகள் காப்பகம் அமைக்கலாம். அரசின் சுற்றறிக்கையை பின்பற்றாததால் முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்டக் கல்வி அலுவலர் மீது பள்ளிக் கல்வித்துறை செயலர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை