பஸ் ஸ்டாண்ட் சீரமைக்கும் பணி தாமதத்தால் பயணிகள் அவதி திருமங்கலத்தில் தீருமா நெரிசல்
திருமங்கலம்:திருமங்கலம் நகராட்சி பஸ் ஸ்டாண்ட் சீரமைக்கும் பணிகள் தாமதமாக நடப்பதால் பயணிகள் பஸ்சுக்காக நீண்ட துாரம் செல்லும் அவதிக்குள்ளாகின்றனர்.திருமங்கலம் நகராட்சி பஸ் ஸ்டாண்ட் சீரமைக்கும் பணிகள் ரூ.2.77 கோடியில் மே மாதம் தொடங்கியது. 45 நாட்களுக்குள் முடிக்க திட்டமிட்டு, தெற்கு தெருவில் தனியார் காலி இடத்தில் செயல்படுவது என முடிவு செய்யப்பட்டது. அடிப்படை வசதிகள் இல்லாத நிலையில் அந்த இடம் மழையால் சேறும் சகதியுமாக மாறியது.இந்நிலையில் நகராட்சி பஸ் ஸ்டாண்டை சீரமைக்கும் பணிகள் மெதுவாக நடக்கிறது. இதுவரை ஒரு சில கடைகள் மட்டுமே சீரமைக்கப்பட்டு புதிய கடைகள் கட்டப்பட்டுள்ளன.தற்போது பஸ்கள் நிற்கும் இடத்தில் சிமென்ட் தளம் அமைத்து வருகின்றனர். இந்தப் பணிகள் முடிந்து தளம் செட் ஆவதற்கு 20 நாட்கள் ஆகும்.பின்னர் மற்ற பணிகளை முடிக்க மேலும் நாட்கள் பிடிக்கும்.தற்போது மதுரையில் இருந்து வரும் டவுன்பஸ்கள் அனைத்தும் நகரின் தெற்கு பகுதியில் உள்ள தற்காலிக பஸ்ஸ்டாண்டுக்கு வருகின்றன.இதனால் ஏற்கனவே நெரிசலான ரோடு கூடுதல் பஸ்களால் மேலும் நெருக்கடியில் தவிக்கின்றன. உசிலம்பட்டி, செக்கானுாரணி பஸ்கள் உசிலம்பட்டி ரோடு சந்திப்பில் நின்று பயணிகளை ஏற்றி இறக்கி செல்வது, பள்ளிகள் உள்ளதால் காலை, மாலையில் நெரிசலால் நகரே திக்குமுக்காடுகிறது.எனவே பஸ் ஸ்டாண்ட் பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் அலைச்சல், நெரிசலுக்கு தீர்வு காண வேண்டும் என பயணிகள் வலியுறுத்துகின்றனர்.நகராட்சி கமிஷனர் அசோக் குமார் கூறுகையில், ''தற்போது பணிகள் நடக்கின்றன. ஆக.15 க்குள் பணிகள் முடிந்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு பஸ் ஸ்டாண்ட் திறக்கப்படும்'' என்றார்.