பழைய பயனளிப்பு ஓய்வூதியத்தை வலியுறுத்தும் சாலை ஆய்வாளர்கள் கருத்துக் கேட்புக் குழுவிடம் தெரிவித்த யோசனை
மதுரை: 'உண்மையான சமூகநீதிக்கு பழைய பயனளிப்பு ஓய்வூதியத்தை அமல்படுத்துவது அவசியம்' என சாலை ஆய்வாளர்கள் கருத்துக் கேட்புக்குழுவிடம் வலியுறுத்தியுள்ளனர். ஓய்வூதிய திட்டம் குறித்து கூடுதல் தலைமை செயலாளர் ககன்தீப்சிங்பேடி தலைமையிலான குழுவிடம், தமிழ்நாடு சாலை ஆய்வாளர்கள் சங்க தலைவர் சுரேஷ், பொதுச் செயலாளர் திருமுருகன், பொருளாளர் செல்வராஜன் உட்பட நிர்வாகிகள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: தமிழக அரசு 1.4.2003 முதல் அமல்படுத்திய புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தால் அரசுக்கும், ஊழியர்களுக்கும் எந்தப் பயனும் இல்லை. எனவே பழைய திட்டத்தை அமல்படுத்த முறையீடு, மாநாடு, இயக்கம் நடத்தி வருகிறோம். தி.மு.க.,வின் தேர்தல் வாக்குறுதியில் பழைய திட்டம் மீண்டும் கொண்டு வரப்படும் என நம்பிக்கை அளிக்கப்பட்டது. தமிழகத்தின் ஓய்வூதியர் எண்ணிக்கை 6 லட்சத்து 97 ஆயிரத்து 174. ஆண்டு தோறும் ஓய்வு பெறுவோர் எண்ணிக்கை 7235. இந்த எண்ணிக்கையில் பங்களிப்பு ஓய்வூதியதாரர்கள் எண்ணிக்கை ஆண்டுக்கு ஒரு சதவீதமே. இதில் தமிழக அரசின் ஓய்வூதிய செலவினம் ரூ.42 ஆயிரம் கோடி. இதில் ஒரு சதவீதம் என்பது ரூ.400 கோடி. இதுவரை பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் அரசு ஊழியர், ஆசிரியர் மற்றும் அரசின் இணைப் பங்கீட்டு தொகை, அதன் வட்டித் தொகை என மார்ச் 2025 வரை மொத்தம் ரூ.84 ஆயிரத்து 507 கோடி அரசின் இருப்பில் உள்ளது. இதில் அரசு மற்றும் அரசு ஊழியர்களுக்கு தலா 50 சதவீதம் பங்கு உள்ளது. இதில் அரசின் தொகையான ரூ.42 ஆயிரத்து 253 கோடியை இருப்பில் வைத்து, அரசு ஊழியர் பங்கு தொகையை வருங்கால வைப்பு நிதி தொகையாக மாற்றம் செய்யலாம். அரசின் இருப்புத்தொகைக்கு 7.1 சதவீத வட்டியாக ரூ.2999 கோடியை ஒவ்வொரு ஆண்டும் ஓய்வு பெறும் 8 ஆயிரம் பேருக்கு ஓய்வூதிய செலவினமாக ரூ.425 கோடியும், மீதித் தொகையை ஏற்கனவே ஓய்வு பெற்று, இறந்து போன 45 ஆயிரத்து 325 ஓய்வூதியதாரர்களுக்கும் வழங்க முடியும். எனவே உண்மையான சமூகநீதி காக்க அரசு பழைய பயனளிப்பு ஓய்வூதிய திட்டத்தை வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.