சாத்தான்குளம் இரட்டை கொலை : இன்ஸ்பெக்டர் ஜாமின் தள்ளுபடி 7 வது முறையாக உயர்நீதிமன்றம் உத்தரவு
மதுரை : துாத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வியாபாரி ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் கொலை வழக்கில் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் தாக்கல் செய்த ஜாமின் மனுவை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை 7 வது முறையாக தள்ளுபடி செய்தது.சாத்தான்குளத்தில் வியாபாரி ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸை போலீசார் 2020 ஜூன் 19 விசாரணைக்கு அழைத்துச் சென்று தாக்கினர். இருவரும் கோவில்பட்டி கிளைச்சிறையில் இறந்தனர். சாத்தான்குளம் இன்ஸ்பெக்டராக இருந்த ஸ்ரீதர், எஸ்.ஐ.,க்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் உட்பட 9 போலீசார் மீது சி.பி.ஐ., கொலை வழக்கு பதிந்தது.மதுரை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் இவ்வழக்கு விசாரணை நடக்கிறது. ஸ்ரீதர் 6 முறை தாக்கல் செய்த ஜாமின் மனுவை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது. மீண்டும் அவர் 7 வது முறை ஜாமின் மனு தாக்கல் செய்தார்.நீதிபதி பி.வடமலை பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது: ஜாமின் அனுமதித்தால் மனுதாரர் தலைமறைவாகக்கூடும். இதனால் கீழமை நீதிமன்றத்தில் விசாரணை பாதிக்கப்படும் என சி.பி.ஐ., மற்றும் ஜெயராஜ் மனைவி செல்வராணி தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. கீழமை நீதிமன்ற விசாரணையில் மனுதாரர் தரப்பில் ஆஜராக வழக்கறிஞரை நியமித்துக் கொள்ளவில்லை. தனது தரப்பில் ஆஜராகி வாதிட சிறை விதிகள்படி வழக்கறிஞரை மனுதாரர் நியமித்துக் கொள்ள வேண்டும். ஜாமின் கோர மனுதாரர் குறிப்பிடும் காரணங்கள் ஏற்புடையதல்ல. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு கூறினார்.