போதி மரத்தை அகற்ற தடை கோரி வழக்கு; அபராதம் விதித்தது உயர்நீதிமன்றம்
மதுரை : தென்காசி மாவட்டம் வடக்கு குருவிகுளத்தில் போதி மரத்தை அகற்ற தடை கோரிய வழக்கை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, மனுதாரருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தது. வடக்கு குருவிகுளம் ராஜேந்திரன் தாக்கல் செய்த பொதுநல மனு:வடக்கு குருவிகுளத்தில் 400 ஆண்டுகால போதி மரம் (அரசமரம்) உள்ளது. அதை அகற்ற மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள தடை விதிக்க வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், ஏ.டி.மரியா கிளீட் அமர்வு விசாரித்தது.அரசு வழக்கறிஞர்: நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான குறிப்பிட்ட சர்வே எண்ணிலுள்ள கோயிலை ஒட்டி மரம் அமைந்துள்ளது. ஆக்கிரமிப்பை அகற்ற 2024 ல் நெடுஞ்சாலைத்துறை நோட்டீஸ் அனுப்பியது. இதை எதிர்த்து சிலர் 2 ரிட் மனுக்களை தாக்கல் செய்தனர். இந்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இவ்வாறு விவாதம் நடந்தது.நீதிபதிகள்: இந்நீதிமன்றம் பிறப்பித்த முந்தைய உத்தரவை மறைத்து, போதி மரத்திற்கு தடை கோரும் போர்வையில், கோயில் மற்றும் மரம் அமைந்துள்ள நிலத்தில் ஆக்கிரமிப்பை அகற்றும் நடவடிக்கைகளை தடுக்க மனுதாரர் முயற்சித்துள்ளார். சட்டத்தின் நடைமுறைகளை தவறாக பயன்படுத்தியுள்ளார். மனுவை தள்ளுபடி செய்கிறோம். மனுதாரருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கிறோம். தொகையை மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி அருகே வி.அம்மாபட்டியிலுள்ள அமலா மனநலம் மற்றும் பெண்கள் மறுவாழ்வு இல்லத்திற்கு செலுத்த வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டனர்.