உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / அதிர வைத்த அலங்காநல்லுார் ஜல்லிக்கட்டு: பரிசு மழை கொட்டியதால் காளைகள், காளையர் உற்சாகம்

அதிர வைத்த அலங்காநல்லுார் ஜல்லிக்கட்டு: பரிசு மழை கொட்டியதால் காளைகள், காளையர் உற்சாகம்

உலகப்புகழ் பெற்ற மதுரை, அலங்காநல்லுார் ஜல்லிக்கட்டு போட்டி இந்தாண்டு வழக்கமான உற்சாகத்துடன் நேற்று காலை, 8:15 மணிக்கு துவங்கியது. கலெக்டர் சங்கீதா முன்னிலையில் வீரர்கள் உறுதிமொழி ஏற்றனர். துணை முதல்வர் உதயநிதி கொடியசைத்து துவக்கி வைத்தார். அமைச்சர்கள் மூர்த்தி, தியாகராஜன், தேனி தங்கதமிழ்செல்வன் எம்.பி., முன்னிலை வகித்தனர்.கிராம கமிட்டி சார்பில் முனியாண்டி, அரியமலை, வலசை கருப்பசாமி கோவில்களை சேர்ந்த மூன்று காளைகளுக்கு முதல் மரியாதை செலுத்தப்பட்ட பின் காளைகள் அவிழ்க்கப்பட்டன. ஒவ்வொரு சுற்றுக்கும் ஒரு கலர் சீருடையில், தலா 50 வீரர்கள் களம் இறக்கப்பட்டனர்.வாடிவாசலில் சீறிப்பாய்ந்த காளைகளை ரவுண்டு கட்டி வீரர்கள் விரட்டி பிடித்தனர். தில் காட்டிய காளைகள் வீரர்களை முட்டித் துாக்கிஎறிந்து பறக்க விட்டன. வெற்றி பெற்ற வீரர்கள், காளை உரிமையாளர்களுக்கு தங்கக்காசு, தங்க மோதிரம், சைக்கிள், அண்டா, மெத்தை உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டன.போட்டியில் 20 காளைகளை அடக்கிய அபி சித்தருக்கு முதல் பரிசாக கார் வழங்கப்பட்டது. சேலத்தைச் சேர்ந்த காளை உரிமையாளர் மோகன் என்பவருக்கு முதல் பரிசாக டிராக்டர் வழங்கப்பட்டது.பதிவு செய்யப்பட்ட 1,000 காளைகளில், 10 சுற்றுகளில் 989 காளைகள் அவிழ்க்கப்பட்டன. வீரர்கள், பார்வையாளர்கள் 72 பேர் மாடுகள் முட்டி காயமடைந்தனர். 11 பேர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.போட்டியில் காளைகள் சேகரிக்கும் பகுதியில் அதே பகுதியைச் சேர்ந்த பெரியசாமி, 66, வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது, அவரை மாடு ஒன்று முட்டியதில் பலத்த காயமடைந்தார். சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் உயிரிழந்தார்.அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் செல்லுார் ராஜு, விஜயபாஸ்கர், நடிகர் சூரி, இலங்கை கிழக்கு மாகாண முன்னாள் கவர்னர் செந்தில் தொண்டைமான் ஆகியோரின் காளைகள் வெற்றி பெற்றன.தென்மண்டல ஐ.ஜி., பிரேமானந்த சின்ஹா தலைமையில் 2,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இன்பநிதி நண்பர்களுக்காக இருக்கை மாறிய கலெக்டர்!

முதன்முறையாக தன் மகன் இன்பநிதியுடன் இந்த ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் உதயநிதி பங்கேற்றார். இன்பநிதி தன் நண்பர்களையும் அழைத்து வந்திருந்தார். நண்பர்களுக்கு இரண்டாவது வரிசையில் இருக்கைகள் ஒதுக்கப்பட்டன. மகன் இன்பநிதியை அருகில் அமரவைத்த உதயநிதி, ஜல்லிக்கட்டு விளையாட்டு குறித்து மகனுக்கு விளக்கம் அளித்தார். தன் நண்பர்களை முன் வரிசைக்கு இன்பநிதி அழைத்ததும், கலெக்டர் தன் இருக்கையை மாற்றிக் கொண்டார். இது சர்ச்சையானது. இது குறித்து கலெக்டர் சங்கீதா கூறுகையில், ''அலங்காநல்லுார் ஜல்லிக்கட்டு நிகழ்வின் போது துணை முதல்வர் உதயநிதி அருகே இருந்த நான் எழுந்து இருக்கை மாறியது குறித்து சர்ச்சையாக்கப்பட்டு வருகிறது. தேவையின்றி வதந்தி பரப்புகின்றனர். அந்த நிகழ்ச்சியில் 'புரொட்டோகால்' படி தான் நான் எழுந்து நின்றேன்,'' என்றார்.நிகழ்ச்சியை கவர் செய்த ட்ரோனை உதயநிதியும், அவரது மகனும் சில நிமிடங்கள் இயக்கினர். இன்பநிதி இயக்கிய போது சரியாக இயக்காததால், அது களத்தில் விளையாடிக்கொண்டிருந்த வீரர்கள் மேல் விழுந்தது. வீரர்கள் சற்று அதிர்ச்சியாகினர்.

ஜல்லிக்கட்டு துளிகள்@

@ புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே வன்னியன்விடுதி ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்ற மயிலாடிகாடு பகுதியைச் சேர்ந்த விவசாயி, சண்முகம், 54, என்பவரின் காளையை அவிழ்த்து விட்டபோது, பரவாக்கோட்டை பகுதியில், சுந்தரம் என்பவரின் கிணற்றில் தவறி விழுந்து இறந்தது அலங்காநல்லுார் ஜல்லிக்கட்டு போட்டியில் மாடு பிடிக்க ஆன்லைன் மூலம் பதிவு செய்த அயர்லாந்து நாட்டை சேர்ந்த கான் ஆன்டனி 53, மருத்துவ பரிசோதனைக்கு பின் வயது மூப்பு காரணமாக நிராகரிக்கப்பட்டார் சிவகங்கை மாவட்டம், திருப்புத்துார் அருகே சிறாவயலில் நடந்த மஞ்சு விரட்டில் காளைகள் குத்தியதில் ஒருவர் இறந்தார்; மூன்று போலீசார் உட்பட 117 பேர் காயமடைந்தனர். மஞ்சுவிரட்டு முடிந்து திரும்புகையில் கண்மாயில் மூழ்கி காளையும், காளை உரிமையாளரும் இறந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

அப்பாவி
ஜன 17, 2025 10:04

இன்பநிதி நண்பர்களுடன் பங்கேற்றதை இருட்டடிப்பு


அப்பாவி
ஜன 17, 2025 10:03

காளைக்கு என்ன உற்சாகம்? அது என்ன சைக்கிள் ஓட்டப் போகுதா? குக்கரில் சமைச்சு சாப்புடப் போகுதா? காளைகள் இவிங்களோட சண்டைக்கு வர்ரேன்னு சொல்லிச்சா?


முக்கிய வீடியோ