டாஸ்மாக் ஊழல் வழக்கு முறையாக விசாரிக்கணும் உதயகுமார் சொல்கிறார்
மதுரை : ''டாஸ்மாக்கில் ஆயிரம் கோடி அளவில் ஊழல் நடந்த விவகாரத்தில் முதல்வர், துணை முதல்வருக்கு நெருக்கமான இருவரை அமலாக்கத்துறை தேடி வருகிறது. மக்கள் பணத்தில் முறைகேடு செய்தவர்களை 'முறையாக' விசாரிக்க வேண்டும்'' என சட்டசபை எதிர்க்கட்சி துணைத்தலைவர் உதயகுமார் கூறினார்.மதுரை அ.தி.மு.க., புறநகர் மேற்கு மாவட்டம், மேற்கு ஒன்றிய கழகம் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம் கட்டப்புளிநகர், வயலுாரில் நடந்தது.ஒன்றிய கழகச் செயலாளர் அரியூர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். உதயக்குமார், மாவட்ட பொறுப்பாளர் மனோகரன் ஆலோசனை வழங்கினர்.உதயகுமார் பேசுகையில், ''மதுரையில் மழையால் வீட்டின் ஒருபகுதி இடிந்து விழுந்து பலியான 3 பேரின் குடும்பத்திற்கு நிவாரணம் அறிவிக்க வேண்டும். அடுத்து வரும் 15 ஆண்டுகளுக்கு தி.மு.க., ஆட்சி தொடரும் என முதல்வர் கூறுகிறார். இந்த 4 ஆண்டு தி.மு.க., ஆட்சியில் மக்கள் நடுத்தெருவில் உள்ளனர். ஆகவே 15 ஆண்டுகள் ஆட்சியில் தொடர முடியாது. புழல், திகார் ஜெயிலில் தான் தொடருவீர்கள். அரக்கோணத்தில் 20 மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். தி.மு.க., ஆட்சியின் அரக்க செயலுக்கு இதுவே சாட்சி என்றார்.