உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / போலீஸ்காரர் எரித்து கொலையா? மனைவியும் இறந்ததால் உறவினர்கள் தர்ணா

போலீஸ்காரர் எரித்து கொலையா? மனைவியும் இறந்ததால் உறவினர்கள் தர்ணா

மதுரை:மதுரையில் விபத்தில் மனைவி இறந்த நிலையில் கணவரான போலீஸ்காரர் மலையரசனும் எரிந்த நிலையில் இறந்து கிடந்தது உறவினர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இருவர் இறப்பிலும் மர்மம் இருப்பதாக உறவினர்கள் சந்தேகப்படுகின்றனர். விருதுநகர் மாவட்டம் முக்குளம் அழகாபுரி கிராமத்தை சேர்ந்தவர் மலையரசன், 36, சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலில் போலீஸ்காரராக 10 ஆண்டுகளாக பணிபுரிந்தார். இவரது மனைவி பாண்டிச்செல்வி, 33. இரு குழந்தைகளுடன் காவலர் குடியிருப்பில் வசித்து வந்தனர்.சமீபத்தில் உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு டூ-வீலரில் மனைவியுடன் மலையரசன் திரும்பிக் கொண்டிருந்தார். மானாமதுரை கட்டனுார் பிரிவில் வாகனம் ஒன்று மோதியதில் பாண்டிச்செல்வி காயமுற்று, சில நாட்களுக்கு முன் இறந்தார்.விடுமுறையில் இருந்த மலையரசன், நேற்று முன்தினம் டூவீலரில் மதுரை வந்தார். மனைவி சிகிச்சை பெற்ற சிந்தாமணி பகுதி மருத்துவமனைக்கு சென்று சில ஆவணங்களை கேட்டு புறப்பட்டவர் மாயமானார். அவர், நேற்று முன்தினம் மதுரை ரிங் ரோடு ஈச்சனோடை பகுதியில் எரிந்த நிலையில் இறந்து கிடந்தார். தனிப்படை காவலரான அவர் சிறந்த பணிக்காக பாராட்டு சான்று பெற்றவர். மனைவி இறந்த சோகத்தில் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என போலீசார் விசாரிக்கின்றனர்.மலையரசன், மனைவி இறப்பில் மர்மம் இருப்பதாக கூறி உறவினர்கள் நேற்று மதியம் மதுரை அரசு மருத்துவமனை முன் மறியலில் ஈடுபட்டனர். போலீசார் சமரசம் செய்ததை தொடர்ந்து மலையரசன் உடலை பெற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !