உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மயிலாடுதுறை / அதிகாரிகள் கவனிக்கவும்! தடையை மீறி பறவைகள் விற்பனை அமோகம்!

அதிகாரிகள் கவனிக்கவும்! தடையை மீறி பறவைகள் விற்பனை அமோகம்!

மயிலாடுதுறை; மயிலாடுதுறை மீன் மார்க்கெட் அருகே தனி நபர்கள் மடையான், கொக்கு உள்ளிட்ட பறவைகளின் விற்பனை அமோகமாக நடைபெற்றது. வங்கக்கடலில் ஏற்பட்ட பெஞ்சல் புயலால் ஏற்பட்ட கடல் சீற்றம் மற்றும் தொடர் மறையின் காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் மீன்வளத்துறை தடை விதித்ததால் 10வது நாளாக மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. சில கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் தடையை மீறி கடலோர மீன்பிடிப்பில் மட்டும் ஈடுபடுவதால் மார்க்கெட்டுகளுக்கு வரும் மீன் வரத்து வெகுவாக குறைந்து அதன் விலை அதிகரித்துள்ளது. மேலும் ஆட்டுக்கறியின் விலை உயர்வு, கறிக்கோழி வரத்து குறைவு ஆகியவற்றால் அசைவ பிரியர்கள் பெரும் ஏமாற்றத்திற்கு ஆளாகினர். இந்நிலையில் மயிலாடுதுறை மீன் மார்க்கெட் அருகில் சிலர் வனத்துறை தடையை மீறி வயல்களில் உணவுக்காக வரும் மடையான், கொக்கு உள்ளிட்ட பறவைகளை பிடித்து வந்து கிலோ ரூ.200 விற்பனை செய்து வருகின்றனர். அதிக விலை கொடுக்க முடியாத அசைவ பிரியர்கள் குறைந்த விலைக்கு விற்கப்படும் இந்த பறவையை ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர். மயிலாடுதுறையில் சட்டவிரோதமாக நடைபெற்று வரும் பறவை விற்பனைக்கு ஏழை, எளிய மக்களிடையே அமோக வரவேற்பு ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. எனவே பாதுகாக்கப்பட வேண்டிய பறவைகள் வேட்டையாடப்படுவதை தடுக்க வனத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பறவைகள் நல ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை