நாகை படகு மீது மோதிய இலங்கை கடற்படை கப்பல்
கோடியக்கரை:நாகை மாவட்டம் செருதுாரைச் சேர்ந்த தர்மன், 55, என்பவருக்கு சொந்தமான பைபர் படகில், நான்கு மீனவர்கள், கடந்த 9ம் தேதி கடலில் மீன்பிடிக்கச் சென்றனர். நேற்று முன்தினம் மாலை கோடியக்கரைக்கு கிழக்கில், 30 கடல் மைல் தொலைவில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, அப்பகுதிக்கு வந்த இலங்கை கடற்படை கப்பல், திடீரென இவர்களின் படகு மீது மோதியதில், மீனவர் படகு கவிழ்ந்தது. கவிழ்ந்த படகை பிடித்துக் கொண்டு நான்கு மீனவர்களும் உயிருக்கு போராடினர்.ஒரு மணி நேரத்திற்கு பின் அவ்வழியே வந்த படகில் இருந்த மீனவர்கள், தத்தளித்துக் கொண்டிருந்த மீனவர்களை காப்பாற்றி, கவிழ்ந்த படகையும் மீட்டு, நேற்று காலை கரை திரும்பினர்.காயமடைந்த மீனவர்கள் நாகை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். சம்பவம் குறித்து கீழையூர் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் விசாரித்து வருகின்றனர்.