விவசாயிகளுக்கு தனித்துவ அடையாள எண்: 31க்குள் பதிய அறிவுரை
விவசாயிகளுக்கு தனித்துவ அடையாள எண்: 31க்குள் பதிய அறிவுரைநாமக்கல்:'பிரதமரின் கவுரவ நிதியுதவி திட்டத்தில் பயன்பெற, விவசாயிகளுக்கான தனித்துவ அடையாள எண் அவசியம்' என, கலெக்டர் உமா அறிவுரை வழங்கியுள்ளார்.இதுகுறித்து, அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: நாமக்கல் மாவட்டத்தில், அனைத்து கிராமங்களிலும் வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் வணிகத்துறை, வேளாண் பொறியியல் துறை சார்ந்த கள அலுவலர்கள், மகளிர் திட்ட சமுதாய பயிற்றுனர்கள், இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் மற்றும் கல்லுாரி மாணவர்கள் வாயிலாக விவசாயிகளின் நில உடைமைகளை பதிவு செய்யும் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு, விவசாயிகளின் ஒப்புதல்களுடன் தகவல்கள் சேகரிக்கப்பட்டு தனித்துவமான அடையாள எண் வழங்கப்பட்டு வருகிறது.இதுவரை, 46,736 விவசாயிகள் மத்திய அரசு வழங்கும் அடையாள எண் பெற்றுள்ளனர். மத்திய, மாநில அரசின் பல்வேறு திட்ட பலன்களை பெற, நில உடைமை விபரங்களை ஒவ்வொரு முறையும் சமர்ப்பிக்க வேண்டியுள்ளது. இதில் ஏற்படும் காலதாமதத்தை களைய, அனைத்து விபரங்களையும் மின்னணு முறையில் சேகரிக்க, வேளாண் அடுக்கு திட்டம் செயல்படுத்தப்பட்டு விவசாயிகளுக்கு தனித்துவமான அடையாள எண் வழங்கப்பட்டு வருகிறது. எனவே, மீதமுள்ள விவசாயிகள் உடனடியாக பதிவு செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறது.நாமக்கல் மாவட்ட விவசாயிகள், சொந்த கிராமங்களை விட்டு வேறு எந்த பகுதியில் இருந்தாலும் அருகில் உள்ள அனைத்து பொது சேவை மையங்களிலும் தங்களது நில உடைமைகளை இலவசமாக பதிவு செய்து தனித்துவமான அடையாள எண் பெற்று பயனடையலாம்.மத்திய அரசின் வழிகாட்டுதல்படி, பிரதமரின் கவுரவ நிதியுதவி திட்டம், பிரதமரின் காப்பீடு திட்டம் போன்ற அரசின் திட்டங்களில் பயனடைய விவசாயிகளுக்கான தனித்துவமான அடையாள எண் அவசியம் ஆகும். வரும், 31க்குள் இலவசமாக பதிவு செய்து பயன்பெறலாம்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.