| ADDED : ஜூலை 15, 2011 12:55 AM
ப.வேலூர்: ப.வேலூர் அருகே, ராஜவாயக்கால் மண்ணை வெட்டிக் கடத்த பயன்படுத்திய மூன்று டிராக்டர், ஒரு பொக்லைன் இயந்திரத்தை வருவாய்துறையினர் பறிமுதல் செய்தனர். அவற்றுக்கு, தலா 25 ஆயிரத்து 290 ரூபாய் அபராதம் விதித்து, ஆர்.டி.ஓ., கவிதா உத்தரவிட்டுள்ளார்.ப.வேலூர் அருகே, குப்புச்சிபாளையம் தெற்கு தோட்டம் ராஜவாய்க்கால் கரை மண்ணை, மர்ம நபர்கள் சிலர் கடந்த வாரம் வெட்டிக் கடத்தினர். தகவல் அறிந்த பரமத்தி தாசில்தார் மல்லிகா தலைமையிலான வருவாய்துறையினர், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். வருவாய்துறையினரை கண்ட நபர்கள் அங்கிருந்து தப்பி தலைமறைவாகினர். அதையடுத்து, அங்கிருந்த மூன்று டிராக்டர், மண் வெட்ட பயன்படுத்தப்பட்ட பொக்லைன் இயந்திரம் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து, திருச்செங்கோடு ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் ஒப்படைத்தனர். அந்த வாகனம் ஒவ்வொன்றுக்கும், தலா 25 ஆயிரத்து 290 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. நான்கு வாகனங்களுக்கும் மொத்தம், ஒரு லட்சத்து 1,160 ரூபாய் அபராதம் கட்ட வேண்டும் என, திருச்செங்கோடு ஆர்.டி.ஓ., கவிதா உத்தரவிட்டுள்ளார்.